/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்... படுமந்தம்:பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
விழுப்புரம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்... படுமந்தம்:பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
விழுப்புரம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்... படுமந்தம்:பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
விழுப்புரம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்... படுமந்தம்:பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
UPDATED : டிச 18, 2025 05:39 AM
ADDED : டிச 18, 2025 05:36 AM

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில், பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் 19 ஆண்டுகளாகியும் முடியாததால் சாலை வசதி, வாய்க்கால் வசதி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் நகராட்சியில், கடந்த 2007 ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கியது. இதற்காக ஆரம்பத்தில் ரூ.49.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து 2013 ம் ஆண்டு கூடுதலாக ரூ.14 கோடி சேர்க்கப்பட்டு, ரூ.49.63 கோடிக்கு புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதன்பின்னர், நகர பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேகரிக்கும் பொருட்டு 14 ஆயிரத்து 150 குடியிருப்புகளை இணைத்து, 165.68 கி.மீ., நீளத்திற்கு ரூ. 263 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் மூலம், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு, சாலமேடு பகுதியில் ரூ. 26. 8 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதாள சாக்கடைப் பணிகள் மந்தமாக நடைபெறுவதால், ஆண்டுக் கணக்கில் இழுபறியாக உள்ளது.
நகரின் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை பணிகள் இழுபறியாக உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.
கவுன்சிலர்கள் எழுப்பும் பிரச்னைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்தினர், குடிநீர் வடிகால் வாரியத்திடம் புகார் தெரிவிக்கின்றனர். திட்டப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் கூறிவிட்டதாக கூறி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒதுங்கிக் கொள்வதாக நகராட்சி கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்னையில், நகர் மன்ற சேர்மன், தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆகியோர் தனி கவனம் செலுத்தியும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதனை மேற்பார்வையிட வேண்டிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பெயரளவில் பணிகளை கண்காணிப்பதாக கவுன்சிலர்கள் பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் துவங்கப்பட்டு, 19 ஆண்டுகளாகியும் முழுமைடையவில்லை.
இப்பிரச்னையை முழுமையாக தீர்க்க நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கலந்தாய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

