/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜீப் முன் பா.ம.க.,வினர் முற்றுகை: ஆட்டோவில் சென்ற கமிஷனர் திண்டிவனம் நகராட்சியில் பரபரப்பு
/
ஜீப் முன் பா.ம.க.,வினர் முற்றுகை: ஆட்டோவில் சென்ற கமிஷனர் திண்டிவனம் நகராட்சியில் பரபரப்பு
ஜீப் முன் பா.ம.க.,வினர் முற்றுகை: ஆட்டோவில் சென்ற கமிஷனர் திண்டிவனம் நகராட்சியில் பரபரப்பு
ஜீப் முன் பா.ம.க.,வினர் முற்றுகை: ஆட்டோவில் சென்ற கமிஷனர் திண்டிவனம் நகராட்சியில் பரபரப்பு
ADDED : ஜன 30, 2024 06:35 AM

திண்டிவனம் நகராட்சி 11வது வார்டு சேடன்குட்டை தெருவில், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் சார்பில், 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக துணை சுகாதார நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே அங்கு போதிய இடவசதி இல்லாததால், மாற்று இடமாக, அவரப்பாக்கம், பாரதிதாசன் பேட்டையில் கட்டுவதற்கு சப் கலெக்டர் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. இதுகுறித்து, திண்டிவனம் நகராட்சியில் இன்று 30ம் தேதி நடைபெற உள்ள மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
சேடன் குட்டை தெருவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் பா.ம.க., நிர்வாகிகள், கவுன்சிலர்கள் நேற்று மதியம் 12:00 மணியளவில், நகராட்சியில் கமிஷனர் தமிழ்ச்செல்வியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, துணை சுகாதார நிலையம் அமைப்பது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரக்கூடாது, தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கனவே கூறியபடி சேடன்குட்டையில்தான் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்றனர். இதற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற மாட்டோம் என்று உறுதி கூறினால்தான் வெளியே செல்வோம் எனக் கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.
பிற்பகல் 2:45 மணியளவில், கமிஷனர் தன்னுடைய அறையை விட்டு வீட்டிற்கு செல்ல ஜீப் அருகே சென்றார்.
உடன், பா.ம.க.,வினர் ஜீப் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கமிஷனர். ஜீப்பை தவிர்த்து அலுவலகத்தின் வெளியே நின்றிருந்த ஆட்டோவில் ஏறிச் சென்றார். அதனைத் தொடர்ந்து பா.ம.க.,வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே சப் கலெக்டர் நேற்று மாலை 4:30 மணியளவில் இரண்டு இடங்களையும் பார்வையிட்டு பா.ம.க.,வினர் மற்றும் கமிஷனருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், இன்று நடைபெறும் நகர மன்ற கூட்டத்தில் சுகாதார நிலையம் கட்டுவதற்கான இடம் குறித்த தீரமானத்தை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.