பெருந்திட்ட வளாக பூங்கா பார்க்கிங் வசதி மேம்படுத்துவது எப்போது? மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை அவசியம்
பெருந்திட்ட வளாக பூங்கா பார்க்கிங் வசதி மேம்படுத்துவது எப்போது? மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை அவசியம்
UPDATED : ஆக 12, 2026 09:59 PM
ADDED : ஆக 12, 2026 09:52 PM

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாக நவீன பூங்காவிற்கு, தேவையான பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி மேற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், 7 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு சறுக்கு, ஊஞ்சல் மற்றும் கிரிக்கெட் பயிற்சி மைதானம், நடை பயிற்சி பாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இங்கு, விழுப்புரம் நகரைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் காலை, மாலை வேளைகளில் தங்கள் குழந்தைகளுடன் வந்து, நேரத்தை செலவிடுகின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு, விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9 லட்சம் ரூபாய் ஒதுக்கி, பூங்காவில், நான்கு இடங்களில் போட்டி தேர்வுகளுக்கு இளைஞர்கள் படிப்பதற்கான குடில்கள் (நிழற்குடை) அமைக்கப்பட்டது.
இதன்பிறகு, நடை பாதையை விரிவாக்கம் செய்வதற்காக, கடந்த 6 மாதங்களுக்கு முன், ரூ.50 லட்சம் செலவில் பணிகளை, லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
இப்பணி நிறைவடைந்ததால், பூங்காவின் உட்புறம் நடைபாதை அகலப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் சிரமமின்றி நடை பயிற்சி மேற்கொள்கின்றனர்.
பூங்காவின் முன்புற பகுதியில் செடி கொடிகள், புதர்கள் வளர்ந்து கிடந்தது. கடந்த சில தினங்களாக தொடர் மழை காரணமாக, பூங்காவின் முன் புற புதர்களில், பாம்புகள் நடமாட்டம் ஏற்பட்டது.
இதனால், பூங்காவிற்கு செல்லும் பொதுமக்கள், சிறுவர்கள் பாதுகாப்பை கருதி, நேற்று முன்தினம் அந்த புதர்கள் அகற்றப்பட்டன.
அப்பகுதியில், கிராவல் மண் கொட்டி சமன்படுத்தப்பட்டது. இதையடுத்து, பூங்காவின் முன்புற பகுதியில் செம்மண் நிரப்பி, பூச்செடிகள் நடுவதற்கான பணிகள், நேற்று மேற்கொள்ளப்பட்டது.
பார்க்கிங் வசதி பூங்காவிற்கு எதிர்ப்புறம், ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்கான குடோனின் இடதுபுறத்தில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது.
அந்த இடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராததால், புதர்கள் மண்டிக் கிடந்தது. கடந்த மாதம், அப்பகுதியில் இருந்த புதர்கள் வெட்டி, அகற்றப்பட்டன. ஆனால், அடுத்த கட்டமாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. கலெக்டர் அலுவலக பிரதான சாலையில், வாரவிடுமுறை நாட்களில், வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில், வாகன நிறுத்துமிடத்தை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், பூங்காவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் வழங்கும் இடத்தை துாய்மையாக பராமரித்திட வேண்டும். மேலும், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ள இடத்தை குறிப்பிட்டு, பெயர் பலகை அமைக்க வேண்டும்.
பெருந்திட்ட வளாகத்திற்கு தேவையான அனைத்து வசதிகளை, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில், படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாகன நிறுத்துமிடம், குடிநீர் வழங்கும் இடத்தை துாய்மையாக பராமரித்தல் ஆகியவற்றில், நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்திட வேண்டும்.
