/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்... திறக்கப்படுமா? மாவட்டத்தில் 100 இடங்களில் திறக்க வலியுறுத்தல்
/
இந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்... திறக்கப்படுமா? மாவட்டத்தில் 100 இடங்களில் திறக்க வலியுறுத்தல்
இந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்... திறக்கப்படுமா? மாவட்டத்தில் 100 இடங்களில் திறக்க வலியுறுத்தல்
இந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்... திறக்கப்படுமா? மாவட்டத்தில் 100 இடங்களில் திறக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 24, 2026 06:04 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா அறுவடை தொடங்கி நடந்து வருவதால் காலத்தோடு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, விதிகள்படி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், இந்த ஆண்டு சம்பா பருவத்தில், நெல் சாகுபடி 90 ஆயிரம் எக்டர் அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இதற்கான அறுவடை இம்மாத முதல் வாரத்தில் தொடங்கி நடந்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம், கண்டமங்கலம் பகுதிகளில் அறுவடை பணிகள் முன்கூட்டியே தொடங்கி நடந்து வருகிறது.
மாவட்ட விவசாயிகள், சம்பா நெல் அறுவடை நடப்பதால் அரசு தரப்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை காலத்தோடு திறக்க வேண்டும் என ஆண்டுதோறும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் முதலே நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல்லை தாமதமின்றி எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், வழக்கம்போல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது தாமதமானதால், முன்கூட்டியே அறுவடை துவங்கியுள்ள விவசாயிகள், தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வழங்கி வருகின்றனர்.
இதனால், இந்த ஆண்டுக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என, கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பே கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, மாவட்டம் முழுதும் முதல் கட்டமாக 50 கொள்முதல் நிலையங்கள் திறக்க அறிவித்து, தற்போது 11 ஒன்றியங்களில் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பரவலாக அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். கடந்தாண்டு தாமதமாக திறந்து, கடைசி நேரத்தில் தான் 87 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்தனர்.
அதுபோல் இல்லாமல், இந்தாண்டு 100 நேரடி நெல் கொள்முதல்களை திறந்து, பரவலாக அறுவடை நடந்து வரும் இடங்களில், கொள்முதல் செய்து விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்காமல் இருப்பதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் முருகேசன் கூறுகையில், 'சம்பா நெல் அறுவடை பணிகள் கடந்த பொங்கல் முதல் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது தனியார் வியாபாரிகள் மூட்டை நெல் 1,500 ரூபாய்க்கு தான் அதிகபட்சமாக எடுக்கின்றனர்.
அதனால் நஷ்டம் ஏற்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1,900 ரூபாய் அளவில், குண்டு மற்றும் சன்ன ரக நெல் எடுக்கப்படும் என்பதால், விவசாயிகள் நஷ்டமின்றி தப்பிக்க முடியும்.
தற்போது 50 இடங்களில் கொள்முதல் நிலையம் திறப்பதாக அறிவித்து, அதில் ஒன்றிரண்டு மட்டும் திறந்துள்ளனர். இந்தாண்டு 100 இடங்களில், கொள்முதல் நிலையங்களை திறந்து பரவலாக கொள்முதல் செய்ய வேண்டும்' என்றார்.
மேலும், மூட்டைக்கு ரூ.50 வசூலிப்பதை தடுக்க வேண்டும், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தலையீடு மற்றும் வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். விதி மீறும் அலுவலர்கள் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

