தேர்வு நிலையிலிருந்து சிறப்பு நிலை நகராட்சியாக உயர்த்தப்படுமா? திண்டிவனம் நகர பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தேர்வு நிலையிலிருந்து சிறப்பு நிலை நகராட்சியாக உயர்த்தப்படுமா? திண்டிவனம் நகர பொதுமக்கள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூலை 03, 2026 01:55 PM
ADDED : ஜூலை 02, 2026 03:00 PM

திண்டிவனம்: திண்டிவனம் நகரத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திண்டிவனம் நகராட்சியின் எல்லையாக தெற்கே ஜக்காம்பேட்டையும், வடக்கே சலவாதியும், கிழக்கே வட ஆலப்பாக்கம் ஊராட்சியும், மேற்கே பெலாக்குப்பம் எல்லைகளுக்குட்பட்ட பகுதியாக உள்ளது. நகரத்தில் மொத்த பரப்பளவு 22.33 சதுர கி.மீ., கொண்டுள்ளது. நகராட்சியில் மக்கள் தொகை 2011ம் ஆண்டின் கணக்குப்படி 72 ஆயிரத்து 796 ஆகும். இதில் 36 ஆயிரத்து 338 ஆண்களும், 36 ஆயிரத்து 458 பெண்களும் உள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 433 ஆகும்.
கடந்த 1949ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாக உருவானது. அதன் பிறகு 1970ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1998ம் ஆண்டு மே 22ம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி தேர்வு நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தற்போது திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தேர்வு நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டு, 18 ஆண்டுகள் ஆன நிலையில், ஆரம்பத்தில் இருந்த 33 வார்டுகள் இன்றைக்கும் நீடிக்கிறது.
மாவட்டத்தில், விழுப்புரம் நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாக இருந்தாலும், அங்கு 37 வார்டுகள் ஆரம்பத்தில் இருந்த நிலையில் தற்போது, எல்லை விரிவாக்கம் செய்து, நகரத்தையொட்டிள்ள கிராம பகுதிகள் நகராட்சி பகுதியில் இணைக்கப்பட்டு 42 வார்டுகளாக உயர்ந்துள்ளது.
அடுத்த கட்டமாக விழுப்புரம் நகராட்சி, மாநகராட்சியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் திண்டிவனம் நகராட்சி, நகர எல்லையை விரிவாக்கம் செய்யாமல், இன்றளவும் 33 வார்டுகள் என்ற நிலையே தொடர்கிறது.
தற்போது திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க.,வைச் சேர்ந்த நிர்மலாரவிச்சந்திரன் நகர மன்ற தலைவராக உள்ளார். கடந்த 2022ல் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வெங்கேடசன் தலைவராக இருந்த போது, திண்டிவனம் நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
அதன்பேரில், திண்டிவனம் நகராட்சி சார்பில், வார்டுகளின் எண்ணிக்கை அதிரிக்கவும், அருகிலுள்ள கிராம ஊராட்சிகளைச் சேர்த்து எல்லைகளை விரிவாக்கம் செய்ய, முறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உள்ளாட்சித்துறை அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டும் அரசு சார்பில் அனுமதி கிடைக்கவில்லை.
தற்போது புதிதாக த.வெ.க., ஆட்சி அமைந்துள்ளது. திண்டிவனத்தைச் சேர்ந்த வன்னி அரசு அமைச்சராகவும் உள்ளார். நகராட்சியின் மக்கள் தொகை எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், நகராட்சியையொட்டியுள்ள பகுதிகளை நகராட்சி பகுதிக்குள் கொண்டு வந்தால்தான், நகராட்சியின் மக்கள் தொகை மற்றும் நகாரட்சியின் வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. இதற்கான முயற்சியை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.
திண்டிவனத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக உயர்த்த நகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
