/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருக்கோவிலுார் , விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்படுமா?: அரசின் தொடர் அறிவிப்புகளால் எதிர்பார்ப்பு
/
திருக்கோவிலுார் , விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்படுமா?: அரசின் தொடர் அறிவிப்புகளால் எதிர்பார்ப்பு
திருக்கோவிலுார் , விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்படுமா?: அரசின் தொடர் அறிவிப்புகளால் எதிர்பார்ப்பு
திருக்கோவிலுார் , விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்படுமா?: அரசின் தொடர் அறிவிப்புகளால் எதிர்பார்ப்பு
UPDATED : மார் 27, 2025 04:16 AM
ADDED : மார் 27, 2025 04:15 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், 20 ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற தொகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பொழுது திருக்கோவிலுாரை விழுப்புரத்துடன் சேர்க்க வேண்டும் எனத் தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்போதைய அ.தி.மு.க., அரசு சுயநலத்திற்காக திருக்கோவிலுார் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட 20 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் சேர்த்தது.
இதற்கு சம்பந்தப்பட்ட 20 ஊராட்சி மட்டுமல்லாது, பல்வேறு நிர்வாக சிக்கல்களை காரணம் காட்டி தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அப்பொழுது எம்.எல்.ஏ.,வாக இருந்த பொன்முடி தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் மீண்டும் திருக்கோவிலுார் விழுப்புரத்துடன் சேர்க்கப்படும் என வியாபாரிகள் மத்தியில் பேசி இருந்தார்.
அதேபோல் தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஒவ்வொன்றாங்க நிறைவேற்றி வருவதுடன், திருக்கோவிலுாரை , விழுப்புரத்தை போல் மாற்றுவேன் என்ற அமைச்சரின் பேச்சுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் திருக்கோவிலுார் மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி ரூ. 60 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
அரசு கலை கல்லுாரி துவங்கப்பட்டு அதற்கான சொந்த இடத்தில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திருக்கோவிலுார் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தியது உள்ளிட்ட வளர்ச்சி பணி திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பான முழுமையான பட்ஜெட்டாக தற்போதைய பட்ஜெட் இருப்பதால், திருக்கோவிலுார் தொகுதி மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
அதனை நிறைவேற்றும் விதமாக நாயனுாரில் சிட்கோ அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியானது. அதேபோல் நீர்வளத்துறை மானிய கோரிக்கையில், திருக்கோவிலுார் அணைக்கட்டு ரூ.130 கோடியில் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையில் திருக்கோவிலுாரில் புதிய பஸ் நிலையம், ஒருங்கிணைந்த வணிக வளாகம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி தொகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் 20 ஊராட்சி மற்றும் திருக்கோவிலுரை, விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை விழுப்புரம் வந்த முதலமைச்சரிடம் வியாபாரிகள், பொதுமக்கள் நேரில் சந்தித்து கோரிக்கையை முன் வைத்தனர். இந்த கோரிக்கையும் வரும் ஏப்ரல் 3ம் தேதி நடைபெறும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பாக வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது.
அதேபோல் வரும் 1ம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையின் போது திருக்கோவிலுார் தரைபாலம் உயரமட்ட பலமாக மாற்றும் அறிவிப்பு, அறளவாடி-பையூர் இடையே தென்பெண்ணை ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கும் அறிவிப்பும் வெளியாகும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
பா.ம.க., மாவட்ட செயலாளர் பாலசக்தி கூறியதாவது:
மாவட்ட பிரிப்பு
என்பது தொகுதி அடிப்படையிலானதாக, மக்கள் வசதிக்கானதாக இருக்க வேண்டும்.
இதுதான் பா.ம.க., வின் கொள்கை. அப்பொழுதுதான் அப்பகுதியின் வளர்ச்சியில்
மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் கவனம் செலுத்த முடியும். அந்த
வகையில் திருக்கோவிலுார் தொகுதி முழுவதையும் உள்ளடக்கி திருக்கோவிலுாரை
விழுப்புரம் மாவட்டத்தில் சேர்ப்பது தான் சரி.
த.மா.கா., முன்னாள் மாவட்ட தலைவர் கணேஷ் கூறியதாவது:
மக்கள்
நலனுக்காக மாவட்டத்தை பிரிக்காததால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக
திருக்கோவிலுார் பகுதி மக்கள் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இது
தொடர்பாக விழுப்புரம் வந்த முதலமைச்சரை சந்தித்து, திருக்கோவிலுார்
உள்ளிட்ட 20 ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க கோரி மனு
அளித்தோம்.
முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
எனவே வரும் சட்டசபை கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என
காத்திருக்கிறோம்.
பா.ஜ., சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
திருக்கோவிலுார்
மற்றும் 20 ஊராட்சிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், எஞ்சிய பகுதிகள்
விழுப்புரம் மாவட்டத்திலும் இடம்பெறுகிறது. ரயில் நிலையம், மார்க்கெட்
கமிட்டி, அரசு போக்குவரத்து கழக பணிமனை என பல அலுவலகங்கள் விழுப்புரம்
மாவட்ட எல்லையான திருக்கோவிலுார் பெயரில் அரகண்டநல்லுாரில் உள்ளது.
இதனால்
பல்வேறு நிர்வாக சிக்கல்கள் எழுகிறது. திருக்கோவிலூர் சார்பு நீதிமன்றம்
புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில், மாவட்ட எல்லை சிக்கலால் வழக்கறிஞர்கள்
பணி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சிக்கலை தீர்க்கும் விதமாக
வரும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே திருக்கோவிலுார் விழுப்புரம்
மாவட்டத்தில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என காத்திருக்கிறோம்.
ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் செந்தில்குமார்:
திருக்கோவிலூரில்
இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது மணம்பூண்டி. வெள்ள
பாதிப்பு ஏற்பட்ட பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட
திருக்கோவிலூர் தீயணைப்பு மீட்பு குழுவினர் வருவதற்கு உயர் அதிகாரிகளின்
அனுமதி பெற வேண்டி காலதாமதம் ஏற்பட்டது. இதுபோல் பல பிரச்னைகளுக்கும் 40
கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் விழுப்புரத்தையே நாங்கள் நம்பி இருக்க
வேண்டி இருக்கிறது. இதுதான் எங்களின் அவல நிலையாக உள்ளது. திருக்கோவிலூரை,
விழுப்புரத்துடன் இணைப்பதுதான் இதற்கு ஒரே தீர்வாக இருக்கும்.
காங்., மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் வாசிம்ராஜா:
திருக்கோவிலுார்
, அரகண்டநல்லுார் இரண்டு நகரங்களும் இயற்கையாகவே பின்னிப்பிணைந்த
பகுதிகள். அரகண்டநல்லுாரில் உள்ள ரயில் நிலையம், திருக்கோவிலுார் என்ற
பெயரில்தான் உள்ளது.
அதேபோல் மார்க்கெட் கமிட்டி, அரசு
போக்குவரத்து கழக பணிமனையும் திருக்கோவிலுார் பெயரில்தான் உள்ளது. எனவே
திருக்கோவிலுாரை விழுப்புரம் மாவட்டத்தில் சேர்ப்பதுதான் சரியானதாக
இருக்கும்.
விழுப்புரம் வந்த முதல்வரை சந்தித்து இது தொடர்பான
கோரிக்கை மனுவை அளித்தோம். அதன் அடிப்படையில் சட்டசபை கூட்ட தொடரில்
அறிவிப்பு வெளியாகும் என காத்திருக்கிறோம்.