/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ. 8 லட்சம் பணத்திற்காக நண்பரை கொன்ற வாலிபர் கைது
/
ரூ. 8 லட்சம் பணத்திற்காக நண்பரை கொன்ற வாலிபர் கைது
ரூ. 8 லட்சம் பணத்திற்காக நண்பரை கொன்ற வாலிபர் கைது
ரூ. 8 லட்சம் பணத்திற்காக நண்பரை கொன்ற வாலிபர் கைது
ADDED : ஜன 02, 2025 07:18 AM

திருவெண்ணெய்நல்லுார்; பணத்திற்காக நண்பரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதைக்கப்பட்ட உடலை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லுார் அடுத்த சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்துகுமரன், 27; விவசாயி. இவர், கடந்த செப்டம்பர் 19ல் இருந்து மாயமானார். இவரது தந்தை முருகன் புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வந்தனர்.
சந்தேகத்தின்பேரில், அதே பகுதியைச் சேர்ந்த, முத்துகுமரனின் நண்பர் தமிழரசனை பிடித்து விசாரித்தனர். அவர், பணத்துக்கு ஆசைப்பட்டு முத்துக்குமரனை கொலை செய்து மலட்டாற்றில் புதைத்துவிட்டதாக தெரிவித்தார்.
போலீசார் தமிழரசனை நேற்று முன்தினம் மலட்டாற்றுக்கு அழைத்து சென்றனர். தமிழரசன் காட்டிய இடத்தில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் தோண்டி பார்த்தபோது உடல் கிடைக்கவில்லை.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள், நேற்று முன்தினம் மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் தமிழரசனை,27, போலீசார் கைது செய்தனர்.
தமிழரசன் நேற்று போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
முத்துகுமரனின் வங்கிக் கணக்கில் இருந்த 8 லட்சம் ரூபாயை எடுப்பதற்காக என்னை வங்கிக்கு அழைத்து சென்றார். வங்கியில் முத்துகுமரனிடம் செக்கில் கையெழுத்து பெற்று, வங்கியில் செலுத்துவது போல் ஏமாற்றி அழைத்து வந்துவிட்டேன்.
பின், அவருக்கு தெரியாமல் இரண்டு தவணையாக 8 லட்சம் பணத்தை என வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொண்டேன். இதை பின்னர் அறிந்துகொண்ட முத்துக்குமரன், பணத்தை தரும்படி வற்புறுத்தினார். இதனால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
கடந்த செப்டம்பர் 19ம் தேதி வாக்குவாதம் முற்றிய நிலையில், மாலை 5:00 மணி அளவில் பணம் கொடுப்பதாக கூறி முத்துகுமரனை எங்கள் நிலத்திற்கு அழைத்து வந்தேன். அங்கு ஏற்பட்ட தகராறில் முத்துக்குமரனை கீழே தள்ளி தாக்கினேன். இதில் எதிர்பாராத விதமாக முத்துகுமரன் இறந்து விட்டார். பின்னர் என்ன செய்வது என தெரியாமல் நிலத்துக்கு அருகே உள்ள மலட்டாற்றில் குழி தோண்டி புதைத்து விட்டேன்.
இவ்வாறு போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் தமிழரசனை நேற்று இரண்டாவது நாட்களாக மலட்டாற்றிற்கு அழைத்துச் சென்று, மாலை 5:30 மணி வரை தேடியும் உடல் கிடைக்கவில்லை. உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

