UPDATED : ஜூலை 04, 2026 05:32 PM
ADDED : ஜூலை 04, 2026 05:31 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையை சேர்ந்த 2 பள்ளி மாணவிகள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பாத நிலையில், போலீசாரிடம் புகார் செய்து, 2 மணி நேரத்தில் மாணவிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 9 ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் நேற்று முன்தினம் காலையில் பள்ளி சென்றுள்ளனர். மாலையில், மாணவிகள் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் இரவு 10 மணிக்கு அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் தலைமையில்,போலீசார் உடனடியாக மாணவிகளை தேடத் துவங்கினர். முதற்கட்டமாக பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி., கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரவு 8: 20 மணிக்கு 2 மாணவிகளும் மதுரையை நோக்கி செல்லும் தனியார் பஸ்ஸில் ஏறியது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் பஸ் கண்டக்டரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது மாணவிகள் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் வரை பயணம் செய்திருப்பது தெரிய வந்தது.
உடன், போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் டில் தீவிரமாக தேடினர். அங்கு பயணிகளுடன் நின்று கொண்டிருந்த 2 மாணவிகளையும் அதிகாலை 12: 30 மணிக்கு மீட்டனர்.
பின்னர், அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி, பாதுகாப்பாக அருப்புகோட்டை அழைத்து வந்து அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 2 மணி நேரத்தில் மாணவிகளை மீட்ட போலீசாரை பெற்றோர்களும் மக்களும் பாராட்டினர்.
----
