/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
/
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஆக 07, 2024 11:22 PM

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று நடந்தது. கோவிந்தா, கோபாலா கோஷம் விண்ணதிர திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு 16 வண்டி சப்பரம் நடந்தது. தினமும் காலையில் ஆண்டாள் மண்டபம் எழுந்தருளல், இரவு வீதி உலாவும் நடந்தது.
ஐந்தாம் திருநாளான ஆக., 3 காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு ஐந்து வருட சேவையும் நடந்தன. ஏழாம் திருநாளன்று இரவு ஆண்டாள், ரெங்க மன்னார் சயனசேவை நடந்தது. முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நேற்று காலை நடந்தது.
நேற்று அதிகாலை ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில், மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு கொண்டு வரப்பட்ட பரிவட்டம், புடவை, மாலைகள் சாற்றப்பட்டு பிரம்ம முகூர்த்தத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் தேரில் எழுந்தருளினர். அங்கு கோவில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். காலை 9:03 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
விழாவில், சடகோப ராமானுஜ ஜீயர், அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா, எம்.எல்.ஏ. மான்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசந்தி, கலெக்டர் ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேர் மதியம் 12:24 மணிக்கு நிலையம் வந்தடைந்தது. விருதுநகர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 1,500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பள்ளத்தில் சிக்கிய தேர்:
மேல ரத வீதியில் தரை வழி மின் வயர்கள் பொருத்தும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடு சரிவர சீரமைக்காததாலும், இரும்பு பிளேட்டுகள் போடாததாலும் தேரின் இடது பின் சக்கரம் பள்ளத்தில் சிக்கி, மின் கம்பத்தில் இடித்து நின்றது. மிகுந்த சிரமத்திற்கு பின் இதை சரி செய்து 20 நிமிடம் தாமதமாக தேர் புறப்பட்டது.