மாவட்டத்தில் விருதுநகர், தென்காசி என இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் விருதுநகர் பகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய் பிரபாகரன், பா.ஜனதா சார்பில் நடிகை ராதிகா உட்பட பலர் போட்டியிடுகின்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ள தென்காசி தனி லோக்சபா தொகுதியில் தி.மு.க. சார்பில் ராணி அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, பா. ஜனதா கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் உட்பட பலர் போட்டியிடுகின்றனர்.
போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் செல்ல பெருந்தகை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் உட்பட மாநில அளவிலான தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்தனர். இதனால் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.
இந்நிலையில் தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்க ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகன சோதனை செய்து வருகின்றனர். மாவட்டத்தின் எல்லைப் பகுதி சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. நாகலாந்து மாநிலத்தில் இருந்து துணை ராணுவ படையினரும் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வாகன சோதனை நடந்து வரும் நிலையில் அப்பாவி மக்கள் கொண்டு செல்லும் பணங்களும், வியாபார நிறுவனங்கள் பொருட்கள் கொள்முதல் செய்ய கொண்டு செல்லும் பணங்களையும், நகைக் கடைகளுக்கு நகைகளை கொண்டு செல்லும் தனியார் லாஜிஸ்டிக் நிறுவன வேன்களையும் பறக்கும் படையினர் பிடித்து வருகின்றனர்.
ஆனால், மாவட்டத்தில் இதுவரை அரசியல் கட்சிகளின் பிரமுகர்களையோ, மக்கள் பிரதிநிதிகள் செல்லும் வாகனங்களையோ நிறுத்தி தேர்தல் பிரிவு அதிகாரிகள் வாகன சோதனை செய்ததாக தெரியவில்லை. மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் தேர்தல் விதிமீறல் வழக்குகள் கூட பதிவு செய்யப்படவில்லை.
தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வார்டு, நகர, ஒன்றிய மாவட்ட நிர்வாகிகளிடம் பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சி நிர்வாகிகள் சர்வ சாதாரணமாக கார்களில் உலா வருகின்றனர்.
ஆனால் அவ்வாறு வருபவர்களை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்வதில்லை. கண் துடைப்பாக தான் வாகன சோதனை செய்கின்றனர். ஆனால், மருத்துவ சிகிச்சைக்கும், திருமண ஏற்பாடுகளுக்கும், வியாபாரப் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் காரில் செல்லும் அப்பாவி மக்கள் மற்றும் வியாபாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் பறக்கும் படையினர், ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் வைத்திருந்தால் அதனை பறிமுதல் செய்கின்றனர்.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளின் இத்தகைய போக்கு மக்களிடமும் வியாபாரிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விரக்தி அடைந்துள்ளார் அவர்கள் தேர்தலின் போது தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்ய வேண்டுமா என குமுறி வருகின்றனர். இதனால் ஏப். 19 ல் பதிவாகும் ஓட்டு சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

