/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் அயன்சத்திரப் பட்டியில் சேதமடைந்த குப்பை தொட்டிகள்
/
சாத்துார் அயன்சத்திரப் பட்டியில் சேதமடைந்த குப்பை தொட்டிகள்
சாத்துார் அயன்சத்திரப் பட்டியில் சேதமடைந்த குப்பை தொட்டிகள்
சாத்துார் அயன்சத்திரப் பட்டியில் சேதமடைந்த குப்பை தொட்டிகள்
ADDED : மே 26, 2024 03:42 AM
சாத்துார்: சாத்துார் அயன் சத்திரப்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த குப்பை தொட்டிகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தெருவில் சிதறி கிடக்கும் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
அமீர் பாளையம் ,புதுப்பாளையம் ,போக்குவரத்து நகர் ,ஆனந்தா நகர் ,மல்லிகை நகர் ஆகிய நகர்கள் அயன் சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ளன. இங்கு ஊராட்சி சார்பில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
பல இடங்களில் குப்பை தொட்டியில் கொட்டாமல் தொட்டியை சுற்றிலும் குப்பை கொட்டப்படுகின்றன. குப்பை தொட்டிகள் பல ஓட்டை விழுந்தும் சக்கரம் உடைந்து போன நிலையிலும் உள்ளது.
ரோட்டின் ஓரத்திலும் குடியிருப்புகளின் நடுவிலும் உள்ள குப்பை தொட்டிகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. ஊராட்சியில் துப்புரவு பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் ஆங்காங்கே குவிந்துள்ள குப்பையால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
மேலும் ஊராட்சி பகுதியில் அதிக அளவில் ஆடு ,கோழி ,மாடு ,பன்றி இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இறைச்சி கடைகளில் இருந்து குப்பைத்தொட்டியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இறைச்சி கழிவுகளை உண்ணும் தெருநாய்கள் வெறி பிடித்த நிலையில் வாகனங்களில் செல்லுபவர்களை விரட்டி கடிக்க வருகின்றன.
சேதமடைந்த குப்பை தொட்டிகளை அகற்றிவிட்டு புதிய குப்பை தொட்டிகளை வைக்கவும் குப்பை தொட்டியில் சேகரமாகும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.