மதுரை மாவட்டத்தையும், கேரள மாநிலம் கொல்லம் நகரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண். 744 மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரங்களான டி. கல்லுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தேவதானம், சிவகிரி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய நகரங்களின் மையப்பகுதி வழியாக செல்கிறது.
இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி, கனரக வாகனங்கள் பயணித்து வருகிறது .இதனால் திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை வரை போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது இந்த வழித்தடத்தை நான்குவழி சாலையாக மாற்ற வேண்டுமென மூன்று மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து திருமங்கலம் பேரையூர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் 1, ராஜபாளையம் 2, சிவகிரி, கடையநல்லூர், செங்கோட்டை தாலுகாக்களில் நிலம்எடுப்பு சிறப்பு தாசில்தார் அலுவலகம் அமைக்கப்பட்டு, நிலை எடுப்பு பணிகள் துவங்கியது.
முதலில் 60 மீட்டர் களத்திற்கு நான்கு வழி சாலை அமைக்க திட்டமிட்ட நிலையில் விவசாய நிலங்கள் மரங்கள், கிணறுகள் அதிகம் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது 45 மீட்டர் அகலத்தில் நான்கு வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 1264 கோடி நிதி ஒதுக்கி பல மாதங்களாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக திருமங்கலத்தில் இருந்து கிருஷ்ணன் கோவில் வரை ரோட்டில் இருபுறமும் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு விரிவாக்க பணிகள் நடந்தது. இதனால் தற்போது அழகாபுரியில் இருந்து வடுகப்பட்டி, நத்தம் பட்டி வழியாக கிருஷ்ணன் கோவில் மின்வாரிய அலுவலகம் வரையுள்ள பகுதிகள் உருமாறி காணப்படுகிறது.
கிருஷ்ணன் கோவிலில் இருந்து வலையப்பட்டி, பாட்டக்குளம், மீனாட்சிபுரம், அச்சங்குளம், கடம்பன்குளம், தைலாகுளம், அத்திகுளம், பிள்ளையார் குளம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம் வழியாக முதுகுடி வரை புதிய ரோடு மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து டி. கல்லுப்பட்டி வரையுள்ள ரோட்டில் வாகனங்கள் பயணித்து வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் ரோட்டிலும், ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் மிகவும் நீண்ட மேம்பாலங்கள் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் தைலாகுளத்தில் மாநில நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே தண்டவாள பாதைகளை கடக்கும் வகையில் மிக நீண்ட பாலம் அமைக்கப்படுகிறது.
2023 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக மேம்பாலங்கள் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக தொழிலாளர்கள் இரவும், பகலும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
2025 மார்ச் 31 க்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து திருமங்கலம் -ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் மூலம் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவித்த வழித்தட நகரங்களான கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர், தேவதானம் போன்ற ஊர்கள் விரைவில் போக்குவரத்து நெருக்கடியில் இருந்து விடுதலை பெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

