ADDED : ஜூலை 22, 2026 04:51 PM
புதர் மண்டி கிடக்கும் நீர்வரத்து பாதை; சேதமடையும் கரைகள்
*அத்திகுளம் தெய்வேந்திரி கண்மாய் பாசன விவசாயிகள் வேதனை
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 23-
ஸ்ரீவில்லிபுத்துார் அத்திகுளம் தெய்வேந்திரி கண்மாய்க்கு வரும் நீர் வரத்து பாதையில் செடி, கொடிகள் வளர்ந்தும், கழிவுகள் கொட்டப்பட்டும்
புதர் மண்டி காணப்படுகிறது. கண்மாய் கரைகள் கரைந்து சேதமடைந்தும், கால்வாய் குழாய்கள் அடைபட்டும் காணப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்து நகரின் மையப்பகுதி வழியாக கிருஷ்ணன்கோவில், அத்திகுளம் ரோடு வழியாக வந்து சோழங்குளம், அத்திகுளம், தெய்வேந்திரி ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் வகையில் நீர் வரத்து பாதைகள் உள்ளது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாயின் மூலம் அத்திகுளம், பொட்டல்பட்டி, நாச்சியார்பட்டி பகுதி விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரயில்வே கேட் பகுதியில் இருந்து தெய்வேந்திரி கண்மாய்க்கு நீர் வரும் பாதையில் செடி, கொடிகள் வளர்ந்தும், கழிவுகள் கொட்டப்பட்டும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் காணப்படுகிறது.
அத்திகுளம் அருந்ததியர் காலனி முதல் பொட்டல்பட்டி வரை உள்ள கண்மாய் கரையில் ஆங்காங்கே பள்ளம் விழுந்து விரிசல் விட்டு மழைக்கு கரையும் நிலை காணப்படுகிறது.
கண்மாய் கரையும் மண் ரோடாக காணப்படுவதால் மழைக்காலங்களில் விவசாயிகள் டூவீலரில் செல்ல முடியாத அளவிற்கு சகதி ஏற்படுகிறது.
கண்மாயில் 3 இடங்களில் நீர் வழிப்பாதைகள் இருந்தும், நாச்சியார் பட்டி செல்லும் ரோட்டில் உள்ள குழாய்கள் அடைப்பட்டு காணப்படுகிறது.
இது போன்ற குறைகளை சரி செய்து தர வேண்டும் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
* குழாய் அடைப்பு
நாச்சியார்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வசதியாக இருந்த குழாய்கள் அடைபட்டு கிடப்பதால் தற்போது அப்பகுதி கண்மாய்க்கு தண்ணீர் செல்ல முடியவில்லை. தெய்வேந்திரி கண்மாய் தண்ணீரும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளேன். எனவே, இதனை உடனடியாக சரி செய்து தர வேண்டும்.
- தேவப்பிரியன், கண்மாய் பாசன விவசாயி சங்க நிர்வாகி.
* பலவீனாமன கரைகள்
அத்தி குளம் தெய்வேந்திரியில் இருந்து பொட்டல்பட்டி வரை கண்மாய் கரை சீரமைக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு சில இடங்களில் மண்கள் கரைந்து காணப்படுகிறது. இதனை சரி செய்து கரைகளை பலப்படுத்தி டூவீலரில் விளைபொருட்களை எளிதில் எடுத்து செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
- மார்ட்டின், பாசன விவசாயி.
* நடவடிக்கை எடுக்கப்படும்
கடந்தாண்டு தெய்வேந்திரி கண்மாயில் சேதமடைந்து காணப்பட்ட மூன்றாவது மடை புதிதாக கட்டப்பட்டுள்ளது. இரண்டாவது மடை பழுது பார்க்கப்பட்டுள்ளது. நீர்வரத்து பாதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
-விக்னேஷ் குமார், உதவி பொறியாளர், பொதுப்பணித்துறை.
