
சிவகாசி: சிவகாசி அரசு காப்புறுதி தொழிலாளர் (இ.எஸ்.ஐ.) மருத்துவமனை பல்வேறு வசதிகள் உள்ள நிலையில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்றும் பட்சத்தில் தொழிலாளர்கள் பெரிதும் பயனடைவர். விரைவில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை சிவகாசி 1987 அக். 10 ல் 50 படுக்கை வசதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 2000ல் 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு ஒரு லட்சத்து 93 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் 200 பேர்வரை வெளி நோயாளிகளாகவும் 50 பேர் வரை உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொது மருத்துவ சேவை, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு அறுவை சிகிச்சை, குடும்பநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவம் ஆகியவை சிறப்பு டாக்டர்களால் வழங்கப்பட்டு வருகிறது. சித்தா, ஆயுர்வேத மருத்துவ வசதியும் உள்ளது. மேலும் உயர்ரக ரத்தப் பரிசோதனை கருவிகள், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, அல்ட்ரா சோனோகிராம், இ.சி.ஜி., லேப்ராஸ்கோப்பி உள்ளன.
மாரடைப்பு வந்தால் அதற்கு உடனடியாக போட வேண்டியமருந்து உள்ளது.அதன் தொடர்ச்சியாக ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோ பிளாஸ்டி அல்லது பைபாஸ் சர்ஜரி போன்ற சிறப்பு சிகிச்சைகளுக்காக, ஒப்பந்தம் செய்யப்பட்ட சிறப்பு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது.
பொது அறுவை சிகிச்சையில் பாரிசவாயு, மூலம், குடல்புண், பித்தப் பை சிகிச்சை, தைராய்டு கட்டிகள், குடல்வால் ஆகியவற்றிற்கு நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
மகப்பேறு மருத்துவத்தில் மாதவிடாய் பிரச்சினை,கருப்பை பிரச்சனை மற்றும் சினைப்பை பிரச்சனைகள் கண்டறியப்பட்டு சிறப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது. முக்கியமாக கருப்பை பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கர்ப்பப் பையை எடுக்கும் அறுவை சிகிச்சை இங்கு தினமும் நடைபெறுகிறது.
டயாலிசிஸ், புற்றுநோய் மேல் சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த முறையில் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.
இவ்வளவு வசதிகள் இருந்தும் கட்டடம் கட்டப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அனைத்து இடங்களிலுமே கட்டடம் சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே சுவற்றில் விரிசல் ஏற்பட்டு பெயர்ந்து கம்பிகளால் மட்டுமே தாங்கி நிற்கின்றது.
மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து கட்டடத்தின் உள்ளேயும் இறங்குகின்றது. 3 தளம் கொண்ட மருத்துவமனையில் 20 ஆண்டுகளாக லிப்ட் செயல்படவே இல்லை. இதனால் சிகிச்சைக்காக வருகின்ற வயதானவர்கள், காயமடைந்தவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள் இடவசதி இல்லாமல் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர், செவிலியர் சிரமப்படுகின்றனர்.
மருத்துவமனையின் வளாகத்தில் போடப்பட்டுஉள்ள ரோட்டில் கற்கள் பெயர்ந்து கால்களை பதம் பார்க்கிறது. இவ்வளவுபிரச்னைகளால் தள்ளாடும் இ.எஸ்.ஐ., மருத்துவமனையை மருத்துவக் கல்லுாரியாக தரம் உயர்த்த வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் ஒரு ஆண்டிற்கு முன்பு சிவகாசியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர் நலதிறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், சிவகாசியில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரி ரூ. 150 கோடி மதிப்பீட்டில் விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் நடைபெறவில்லை.
சமீபத்தில் சட்டபேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தனர். ஆனாலும் அடுத்த கட்ட நடவடிக்கை இல்லை.
செல்வி, திருத்தங்கல்: மருத்துவமனையில் லிப்ட் இயங்காததால் வயதானவர்கள், காயம் அடைந்தவர்கள் மாடிக்கு படியேறி செல்ல சிரமப்படுகின்றனர். இங்கு உள் நோயாளிகளுக்கு குறைந்த அளவே கழிப்பறை உள்ளது. கூடுதல் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
தரமான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பல்வேறு வசதிகள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். மருத்துவமனையில் பெரும்பான்மையான கட்டடங்கள் மிகவும் மோசமாக சேதமடைந்துஉள்ளது. ஆங்காங்கே சிமெண்ட் பெயர்ந்து கட்டடம் கம்பிகளால் மட்டுமே தாங்கி நிற்கிறது. இதனால் சிகிச்சைக்காக வருபவர்கள் மருத்துவமனை வளாகத்தில் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர். உடனடியாக கட்டடங்களை சீரமைக்க வேண்டும்.
தீர்வு: மருத்துவக் கல்லுாரியாக மாறுவதற்கு, முதலில் இங்கு உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்கையில், இங்குள்ள உள் நோயாளிகள், வெளி நோயாளிகளை இரட்டிப்பாக்க வேண்டும். 100 படுக்கை வசதி இருந்தும் 60 சதவீதம் மட்டுமே பூர்த்தியாகின்றது. 100 சதவீதம் பூர்த்தியானால் இட நெருக்கடியும் ஏற்படுகின்றது. அதே சமயத்தில் இதனை இரட்டிப்பாக வேண்டும் என்ற தகுதியை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே லேப்ராஸ்கோப்பி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதனால் மருத்துவக் கல்லுாரியாக மாற்றுவதுற்கு வாய்ப்பாக இருக்கும். மேலும் தொழிலாளர்கள் அனைவரும் பெரிதும் பயனடைவர்.