ADDED : மார் 14, 2026 07:20 AM
அருப்புக்கோட்டை: -: அருப்புக்கோட்டையில் அனைத்து பகுதிகளும் ஆக்கிரமிப்புகளின் உச்சத்தில் உள்ளதை நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, டிராபிக் போலீசார் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தினம் தினம் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் தினமும் ஒரு விபத்து நடக்கிறது.
அருப்புக்கோட்டையில் நிரந்தர ஆக்கிரமிப்புகளால் பல ஆண்டுகளாக அனைத்து பகுதி ரோடுகளும் இயல்பாகவே குறுகிவிட்டன. இருக்கின்ற ரோடுகள் ஓரத்தில் நடைபாதை கடைகள் வைத்துள்ளனர். அந்த பகுதி கடைக்காரர்களும் நடைபாதைகளை ஆக்கிரமித்து தங்கள் கடைகளை நீட்டித்துள்ளனர்.
மதுரை ரோடு, திருச்சுழி ரோடு, விருதுநகர் ரோடு, அண்ணாதுரை சிலை பகுதி, தெற்கு தெரு, பழைய, புதிய பஸ் ஸ்டாண்டுகள் உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளாகும். இந்தப் பகுதிகளில் ஏராளமான கடைகள் இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், மக்கள் வந்து செல்கின்றனர். அனைத்து பஸ்களும் கனரக வாகனங்களும் நகருக்குள் வந்து செல்வதாலும், நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.
பிரச்னை பல ஆண்டுகளாக பஜார் பகுதிகளில் நிரந்தர ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் ரோடுகள் குறுகி விட்டன. அதே சமயம் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் ரோட்டின் இருபுறமும் உள்ள கடைகளின் சன் ஷேடுகளை நீட்டித்துள்ளதாலும் வாகனங்கள் செல்ல சிரமப்படுகின் றன.
பஜார் பகுதியில் கடைகள் வைத்திருப்பவர்கள் கடைகளை ரோடு வரை நீட்டித்து ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இது தவிர, ரோடு அருகே நடைபாதை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை பரப்பியுள்ளனர். தினமும் நடைபாதை கடைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு அடிக்கடி ஏற்படுகிறது.
நடைபாதைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாததால் மக்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அண்ணா சிலை பகுதி முழுவதும் உச்சகட்ட ஆக்கிரமிப்பில் உள்ளது.
15 ஆண்டுகளாக நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2024ல், நகராட்சி, நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, போலீஸ் இணைந்து மேம்போக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
சில நாட்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டது. ஒருவழிப் பாதையாக இருக்கும் தெற்கு தெருவில் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகிறது.
காந்திநகர் பகுதியில் ரோடு அகலமாக இருந்தும் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதை நெடுஞ்சாலை துறையினர் கண்டு கொள்வதில்லை. நகராட்சியும் நெடுஞ்சாலை துறையும் மெத்தனமாக இருப்பதால் ஆக்கிரமிப்பாளர்கள் துணிந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆளுங்கட்சி தலையிட்டாலும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற முடியவில்லை.
தீர்வு நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் மார்க்கிங் செய்த பகுதிகளை உடனடியாக அகற்ற வேண்டும். காலக்கெடு எதுவும் கொடுக்காமல் உடனடியாக நிரந்தர ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அப்புறப்படுத்த வேண்டும். ரோடுகளை ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் டிராபிக் போலீசார் கண்காணிக்க வேண்டும்.
நகரில் இருக்கின்ற ரோடுகளை முழுமையாக அகலப்படுத்தி புதியதாக ரோடு போட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நகராட்சி, நெடுஞ்சாலை, வருவாய்த்துறை போலீஸ் இணைந்து கட்டாயமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நிரந்தர ஆக்கிரமிப்புகளை கால தாமதம் இன்றி அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும்.

