ADDED : ஏப் 04, 2025 06:18 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ரோடு, வாறுகால்கள், தெருவிளக்குகள்உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த புறநகர் பகுதியான ஜெயநகர் உருவாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. திருச்சுழி மெயின் ரோட்டில் இருந்து ஜெயநகர் வரும் ரோடு சேதமடைந்துஉள்ளது.
தார் ரோடு இல்லாமல் மண் ரோடாக இருப்பதால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக ரோட்டில் நடக்க முடியவில்லை. டூவீலர்கள் சகதியில் சிக்கிக் கொள்கிறது. ஜெய நகரில் பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
பல தெருக்களில் தெருவிளக்கு இல்லை. இரவு நேரங்களில் நடக்க முடியாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. ஊராட்சியில் இருந்து வீடுகளில் குப்பைகளை வாங்க வருவது இல்லை. இதனால்குப்பையை ரோடு ஓரங்களில் கொட்டி எரிப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.
இந்த பகுதியில் மட்கும் மட்காத குப்பைகளை பிரிப்பதற்கு தொட்டிகள், மறு சுழற்சி செய்ய மையம், மண் புழு உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்படும் அவை பயன்படுத்தாமலேயே சேதம் அடைந்து விட்டன.
ஜெயநகரில் மேல்நிலை தொட்டி கட்டும் பணி ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்புகள் வழங்கப்படவில்லை. புறநகர் பகுதிகளை ஊராட்சி நிர்வாகம் வளர்ச்சி பணிகள் செய்வதில் பாராமுகமாக உள்ளனர்.
லட்சுமி நகரிலும் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். இங்கு செல்ல முறையான ரோடு இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
ரோடு வேண்டும்
உலகநாதன், விவசாயி: ஜெயநகரில் உள்ள தெருக்களில் தார் சாலை இல்லாமல் உள்ளது. மண் ரோடாக இருப்பதால் மேடும், பள்ளமுமாக உள்ளது. இரவு நேரங்களில் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. வயதானவர்கள் தடுக்கி விழுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் எங்கள் பகுதிக்கு தார் ரோடு அமைத்து தர வேண்டும்.
குப்பைத்தொட்டி இல்லை
விஜயலட்சுமி, குடும்ப தலைவி: ஜெயநகரில் வீடுகளில் குப்பை வாங்க தூய்மை பணியாளர்கள் வருவது இல்லை. தெருக்களில் குப்பை தொட்டிகளும் இல்லை. இங்கு உள்ள குப்பை மறு சுழற்சி மையமும் காட்சி பொருளாக உள்ளது. இதனால், குப்பை கொட்ட தொட்டிகளை தேடி அலைய வேண்டியுள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லை
ஜவஹர், இன்ஜினியர்: ஜெயநகரில் தேவையான அடிப்படை வசதிகளான ரோடு, வாறுகால், தெரு விளக்கு இல்லை. இதனால், கழிவு நீர் தேங்கி சுகாதார கேடாக உள்ளது. தெரு விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் வெளியில் சென்று வர தயக்கமாக உள்ளது. முதியோர்கள் வெளியில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்.