/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாயில் மடை சேதமாகி வயல்களில் வீணாகும் தண்ணீர்
/
கண்மாயில் மடை சேதமாகி வயல்களில் வீணாகும் தண்ணீர்
ADDED : ஏப் 28, 2024 06:13 AM

விருதுநகர் ; விருதுநகர் அருகே பேராலி கண்மாயில் மடை சேதமாகி இருப்பதால் கண்மாய் நீர் அருகே உள்ள வயல்களுக்கு சென்று வீணாகி வருகிறது.
மாவட்டத்தில் டிச. 18, 19 பெய்த கனமழையால் அனைத்து கண்மாய்களும் நிறைந்து மறுகால்பாய்ந்தது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல கண்மாய்களில் நீர் இருப்பு குறைந்தும், வறண்டும் காணப்படுகிறது. விருதுநகர் அருகே பேராலியில் உள்ள கண்மாய் கோடை வெப்பத்திலும் வற்றாமல் நீர் நிறைந்து காணப்படுகிறது. இந்த கண்மாய் பாசனத்தில் உள்ள வயல்களில் தற்போது சாகுபடிக்கான பணிகள் எதுவும் நடைபெறாததால் கண்மாய் நீர் திறக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் மராமத்து பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் சேதமான மடைகள்சீரமைக்கப்படவில்லை.
இதனால் கண்மாய் நீர் சேதமான மடை வழியாக வயல்களுக்கு சென்று வீணாகி வருகிறது. பேராலி பகுதியில் தற்போது நித்தியக்கல்யாணி அறுவடை நடந்து வருகிறது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வைகாசி பட்டத்தில் விவசாயிகள் அடுத்த உழவுப்பணிகளை மேற்கொள்ளும் போது தேவையான தண்ணீர் இல்லாமல் போய்விடும். மேலும் விருதுநகரில் பல கண்மாய்கள் வறண்டு உள்ள நிலையில் நீர் நிறைந்து காணப்படும் பேராலி கண்மாய் நீரை வீணாக்காமல் தடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

