ADDED : ஜூலை 15, 2025 03:09 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அரசியல் நிகழ்ச்சிக்காக முச்சந்தி சாலையை தடுத்து அமைக்கப்பட்ட பந்தல் 20 நாட்களுக்கு பின் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டுள்ளது.
ராஜபாளையத்தில் சீர்மரபினர் நல வாரியம் சார்பில் உறுப்பினர் அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜூன் 23 ல் நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்காக சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் இப்பகுதி முச்சந்தியில் தடுப்புகள் அமைத்து மேடை,பந்தல் அமைக்கப்பட்டது.
விழா முடிந்து 20 நாட்கள் கடந்தும் பந்தலை அகற்றாமல் வைத்துள்ளதால் ஆக்கிரமித்து வாகன நிறுத்தம், வாகனங்கள் தென்காசி ரோட்டில் இருந்து ஜவஹர் மைதானத்திற்கு கடந்து செல்ல வழியற்று இருந்தது குறித்து படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் செய்தி எதிரொலியாக சாலையில் அமைக்கப்பட்டு இருந்த பந்தல் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
