/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆம்புலன்ஸ்கள் விரைவாக சென்று வர நடவடிக்கை தேவை
/
ஆம்புலன்ஸ்கள் விரைவாக சென்று வர நடவடிக்கை தேவை
ADDED : செப் 07, 2025 02:39 AM

மாவட்டத்தில் தொழில் நகரங்களான , ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மட்டுமின்றி அனைத்து நகரங்கள், கிராமங்களிலும் ஆண்டுக்காண்டு டூவீலர்கள், ஆட்டோ, கார், வேன்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இதில் லோடு வேன்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு சொந்த இடம் இல்லாத நிலையில் பொது பயன்பாட்டு இடங்களான ரோடுகள், பஜார் வீதிகள், பஸ்டாண்டு உட்பட அதிக நெருக்கடி உள்ள ரோடுகளில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.
இதில் குறுகிய தெருக்களில் எதிரும் புதிருமாக வாகனங்கள் வந்து செல்ல முடியாத அளவில் கூட கார்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்படுகிறது.
பஜார் வீதி ரோடுகளில் வெள்ளை கோடுகளை தாண்டியும் போக்குவரத்திற்கு இடையூறாக டூவீலர்களை இன்றைய இளைஞர்கள் தங்கள் இஷ்டம் போல் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
மரங்கள் நிறைந்த இடங்களை பயன் படுத்தி தள்ளுவண்டி கடைகளும் நிறுத்தப்படுவதால் மாவட்டத்தில் ஒவ்வொரு நகரிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதனை சரி செய்ய வேண்டிய போக்குவரத்து காவல்துறை போலீசாரோ தினசரி அபராதம் விதிப்பதில் மட்டும்தான் தங்களது கடமையை செய்கின்றனர். வாகனங்கள் நிறுத்தப்படுவதை பார்த்தும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
குறிப்பாக மருத்துவமனைக்கு செல்லும் ரோடுகளில் ஆக்கிரமிப்புகளாலும், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங் களாலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்து சமயங்களில் உயிர் காக்கும் சிகிச்சை பெற வேண்டியவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டு வருவதில் கூட சிரமம் ஏற்படும் நிலை ஒவ்வொரு நகரிலும் காணப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்துாரில் பெரிய மாரியம்மன் கோவில் போலீஸ் குடி யிருப்பு முதல் அரசு மருத்துவமனை வரையுள்ள ரோட்டில் எளிதில் ஆம்புலன்ஸ்கள் வர முடியாத அளவிற்கு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப் படுகிறது.
அரசு மருத்துவமனை வடக்கு பகுதியில் உழவர் சந்தை ரோட்டின் கிழக்கு பகுதியில் மீன் கடைகளும், மேற்கு பகுதியில் ஆட்டோக்களும் நிறுத்தப்படுகிறது.
அரசு மருத்துவமனை வாசல் வடபகுதியில் நகராட்சி நிர்வாகமே பல ஆண்டுகளாக சைக்கிள் ஸ்டாண்ட் அமைத்து மக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித் துள்ளது.
வடக்கு ரத வீதியில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் உள்ள நிலையில் இதயம், பிரசவம் போன்ற சிகிச்சைக்கு வருபவர்கள் எளிதில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத அளவிற்கு ரோட்டில் இரண்டு புறமும் இரண்டடுக்கு ஆக்கிரமிப்புகள் காணப்படுகிறது.
ராஜபாளையத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட் கிழக்கு பகுதி காமராஜ நகரில் பல தனியார் மருத்துவமனைகள் உள்ள நிலையில் அங்கும் ரோட்டில் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ்கள் எளிதாக வர முடியாத நிலை உள்ளது.
இதே நிலை மாவட்டத்தில் ஒவ்வொரு நகர் பகுதியில் காணப்படுகிறது. உயிர்காக்கும் சிகிச்சைகள் பெற வேண்டியவர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனையை சென்றடைய முடியாத நிலை உள்ளது.
ஒவ்வொரு நகரிலும் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை அந்தந்த பகுதி போலீஸ் உயர் அதிகாரிகள் நேரடியாக பார்த்தும் அதனை சரி செய்வதில் அக்கறை காட்டு வதில்லை.
இதனால் மருத்துவமனை பகுதிகளில் எளிதில் ஆம்புலன்ஸ்கள் சென்றுவர முடியாத நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது.
இதனை சரிப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.