/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சட்டவிரோத பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை தேவை
/
சட்டவிரோத பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை தேவை
ADDED : செப் 13, 2024 04:41 AM
மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், விருதுநகர், வெம்பக்கோட்டை பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. இது தவிர ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளும் இயங்குகின்றன.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உரிமம் பெற்று வைத்திருக்கும் பட்டாசு கடை அருகே சிலர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் தகர செட் அமைத்தும் சட்ட விரோதமாகவும் சிலர் பட்டாசு தயாரிக்கின்றனர். குடிசைத் தொழில் போன்று எந்தவித அனுமதியும் பெறாமல் பட்டாசு தயாரிப்பு மேற்கொள்ளும் இதுபோன்ற பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகம் என்பதால் தவறு என தெரிந்தும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபடுவதால் முறையாக அனுமதி பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பட்டாசு உற்பத்தியில் தேக்கம் ஏற்படுகிறது என ஆலை உரிமையாளர்கள் புலம்புகின்றனர். கடந்த காலங்களில் பட்டாசுக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால் சுழற்சி முறையில் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்த நிலையில் தற்போது தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தவிர சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் விபத்தில் சிக்கினால் உரிய நிவாரணம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். கடந்த காலங்களில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது பலியானவர்கள், காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி, செப். 13--
மாவட்டத்தில் தகர செட் அமைத்தும், பட்டாசு கடைகளிலும் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதால் அரசு அனுமதியுடன் செயல்படும் பட்டாசு ஆலைகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.