/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போதை எதிர்கால கனவை உறவுகளை சிதைத்து விடும்
/
போதை எதிர்கால கனவை உறவுகளை சிதைத்து விடும்
ADDED : ஆக 21, 2025 11:49 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: ''போதை பழக்கம் படிப்பையும், எதிர்கால கனவையும், குடும்ப உறவுகளையும் சிதைத்து விடும்,'' என நீதிபதி அகிலா தேவி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு, நல்வாழ்வு வழி செலுத்துதல், சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலையில் நடந்தது.
பல்கலை வேந்தர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி அகிலா தேவி தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் தான் நம் நாட்டின் எதிர்காலம். உங்கள் கைகளில் தான் நம் நாட்டின் வளர்ச்சி அடங்கி உள்ளது. இந்நிலையில் போதைப் பொருள் அரக்கன் நம்முடைய இளைய தலைமுறையை விழுங்க பார்க்கிறான். ஒரு முறை இந்த போதை உலகில் நுழைந்து விட்டால் அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அது படிப்பையும், எதிர்கால கனவையும், குடும்ப உறவுகளையும் சிதைத்து விடும்.
சிறிய அளவு போதை பொருள் வைத்திருந்தாலே கடுமையான தண்டனைகள் உண்டு. அதிக போதைப் பொருட்கள் வைத்திருந்தால் சில சமயங்களில் மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். எனவே, போதை பொருளின் ஆபத்தை உணர்ந்து மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். என பேசினார்.
முகாமில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏ.எஸ்.பி. சண்முகசுந்தரம், மன நலத்திட்ட உளவியலாளர் இளையராஜா பதிவாளர் வாசுதேவன், மாணவர்கள் பங்கேற்றனர். ஆணைக்குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் பிலோமின் நன்றி கூறினார்.

