ADDED : ஏப் 29, 2025 04:58 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் பஸ் ஸ்டாண்டிற்குள் பல தனியார் பஸ்கள் வராமல் ராமசாமியாபுரத்தில் இறக்கி விடுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கூமாபட்டியில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், விருதுநகர், மதுரை, தேனி நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர். இதற்காக ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து கூமாப்பட்டிக்கு பஸ்கள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் சமீப காலமாக கூமாபட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் பல தனியார் பஸ்களும் ஒரு சில அரசு பஸ்களும் வராமல் ராமசாமிபுரம் விலக்கு ரோட்டில் மக்களை இறக்கி விட்டு விடுகின்றனர்: இதனால் நெடுங்குளம், தைக்கா பஜார் பகுதியை சேர்ந்த மக்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, பெர்மிட் படி அனைத்து பஸ்களும் கூமாபட்டி பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்ல பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

