உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளில் பட்டாசுகள் தயாரிப்பது அதிகரிப்பு!மூடியவைகளில் கண்காணிப்பு இல்லாததால் விபத்திற்கு வாய்ப்பு
உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளில் பட்டாசுகள் தயாரிப்பது அதிகரிப்பு!மூடியவைகளில் கண்காணிப்பு இல்லாததால் விபத்திற்கு வாய்ப்பு
UPDATED : ஜூலை 02, 2026 04:45 PM
ADDED : ஜூலை 02, 2026 04:40 PM

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது கடந்த சில நாட்களாக அதிகரத்து வருகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிகாகரிகள் இவ்வாலைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார் விருதுநகர், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. தவிர 2000 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளும் இயங்குகின்றன.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உரிமம் பெற்று வைத்திருக்கும் பட்டாசு கடை அருகே சிலர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் , காட்டுப்பகுதிகளிலும் தகர செட் அமைத்தும், குடோனை வாடகைக்கு எடுத்தும் சட்டவிரோதமாக சிலர் பட்டாசு தயாரிக்கின்றனர். இதுபோன்று சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகம் என்பதால் தவறு என தெரிந்தும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசு நிவாரணம் கிடைப்பதிலும் சிரமம் ஏற்படுகின்றது.
இந்நிலையில் உரிமம் பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் அதிகாரிகள் ஏதேனும் விதிமீறல் இருந்தால் தற்காலிகமாக ஆலையின் உரிமத்தை ரத்து செய்கின்றனர். ஆனால் அதன் பின்னர் அதிகாரிகள் அந்த ஆலைகளை கண்டு கொள்வதில்லை.
இதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள், தங்களது பட்டாசு ஆலையின் முன்புற கேட்டை வெளியில் இருந்து பூட்டி விடுகின்றனர். ஆலையின் பின் பகுதியில் வழி ஏற்படுத்தி உள்ளே சட்ட விரோதமாக அதிக ஆட்களை வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது எந்த விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
சமீபத்தில் மாரனேரி, சிவகாசி பகுதியில் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தொடர்ந்து அதிகாரிகள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ஆலைகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுகிறதா என கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
