/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாமிரபரணி குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்----
/
தாமிரபரணி குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்----
ADDED : நவ 13, 2025 12:11 AM

தளவாய்புரம்: செட்டியார்பட்டி சேத்துார் ரோட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு லிட்டர் குடிநீர் ரோட்டில் வீணாகிறது.
செட்டியார்பட்டி சேத்துார் மெயின் ரோடு தளவாய்புரம், புனல்வேலி, புத்துார், மீனாட்சிபுரம், முகவூர், செட்டியார்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தினரின் போக்குவரத்திற்கு பயன்பட்டு வருகிறது.
இப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகள், கனரக வாகனங்கள், பஸ்கள் இந்த ரோட்டின் வழியே சேத்துார், தளவாய் புரம் வழியாக செல்ல வேண்டும்.
இந்த ரோட்டில் 2019 முதல் முகவூர் காமராஜர் சிலை முதல் முத்துச்சாமிபுரம் கூட்டுறவு வங்கி வரை பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யும் பணி தொடர்கதையாக இருந்து வந்தது.
சில மாதங்களுக்கு முன் ஏற்கனவே உள்ள குழாயை மாற்றி புதிய குழாய் பதித்தனர். இதனால் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டது.
இந்நிலையில் காமராஜர் சிலை அடுத்த மூன்று இடங்களில் குடிநீர் குழாய் சேதமாகி ரோட்டில் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் சாலை மேடு பள்ளங்களாக மாறுவதுடன் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்படுகிறது.
நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் முன் வர வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

