/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான ரோடு, தெருவில் ஓடும் கழிவுநீர்
/
சேதமான ரோடு, தெருவில் ஓடும் கழிவுநீர்
ADDED : ஜூன் 28, 2025 11:26 PM
அருப்புக்கோட்டை: சேதமான ரோடு, தெருவில் ஒடும் கழிவுநீர், திறந்த வெளி கழிப்பறை உட்பட பல்வேறு பிரச்னைகளால் அருப்புக்கோட்டை அருகே காசிலிங்காபுரம் வடக்கு காலனி மக்கள் பல ஆண்டுகளாக ரோடு அவதிப்பட்டு வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சேது ராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காசிலிங்காபுரம் வடக்கு காலனியில் மெயின் ரோட்டில் இருந்து காலனிக்கு வரும் ரோடு மேடும் பள்ளமும் ஆக கற்கள் பெயர்ந்து நடக்க முடியாத நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக ரோட்டில் நடக்க முடியாத நிலையில் இருக்கிறது.
தெருக்களில் வாறுகால் இல்லாததால் கழிவுநீர் தெருவின் நடுவில் ஓடுகிறது. காலனியில் பொது கழிப்பறை இல்லாததால் பெண்கள் சிரமப்படுகின்றனர். திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இங்கு நவீன சுகாதார வளாகம் கட்டித் தரப்பட வேண்டும்.
காலனியில் இருந்து மயானத்திற்கு செல்லும் பாதை மிக மோசமான நிலையில் உள்ளது. மயானத்திலும் தேவையான வசதிகள் இல்லை. மயானத்திற்கு செல்லும் ரோட்டை புதியதாக அமைக்க வேண்டும். 50 ஆண்டிற்கு மேலாக எந்தவித அடிப்படை வசதிகளும் செல்லவில்லை என காலனி மக்கள் புலம்புகின்றனர். மெயின் ரோட்டில் இருந்து காலனிக்கு செல்லும் வழியில் தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் இரவு நேரங்களில் நடந்து செல்ல சிரமப்பட வேண்டி உள்ளது.
ரோடு வேண்டும்
லட்சுமி, குடும்ப தலைவி: எங்கள் காலனிக்கு வரும் பாதை மற்றும் தெருக்களில் பல ஆண்டுகளாக ரோடு அமைக்கவில்லை. கிடங்கான ரோடாக இருப்பதால் எங்களால் நடந்து செல்ல முடியவில்லை. குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல சிரமப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை கோரிக்கை வைக்கும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எங்கள் பகுதிக்கு ரோடு அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாறுகால் இல்லை
முத்துமாரி, குடும்ப தலைவி: எங்கள் வடக்கு காலனியில் உள்ள தெருக்களில் வாறுகால் அமைக்கப்படவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெருவில் நடையில் ஓடுவதால் பக்கத்து வீடுகளில் அடிக்கடி சண்டை நடக்கிறது. கழிவுநீர் தேங்கிருப்பதால் சுகாதாரத் கேடு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் எங்களுக்கும் முறையாக அனைத்து தெருக்களுக்கும் வாறுகால் அமைத்து தர வேண்டும்.
கழிப்பறை இல்லை
முத்துலட்சுமி, குடும்பத்தலைவி: வடக்கு காலனியில் பொது கழிப்பறை இல்லை. இதனால் திறந்த வெளி மற்றும் ரோடு ஓரங்களை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் இருபாலாருக்கும் நவீன சுகாதார வளாகம் எங்கள் பகுதியில் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிப்பறை இன்றி பெண்கள் சிரமப்படுகின்றனர்.