/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாநகராட்சிகளில் நாய்கள் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்க முடிவு
/
மாநகராட்சிகளில் நாய்கள் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்க முடிவு
மாநகராட்சிகளில் நாய்கள் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்க முடிவு
மாநகராட்சிகளில் நாய்கள் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்க முடிவு
ADDED : ஜன 19, 2025 04:36 AM
விருதுநகர்: அனைத்து மாநகராட்சிகளிலும் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தெருக்கள், ரோடுகளில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் வயதானவர்கள் என பலர் தினமும் நாய்களால் கடிபடுவது தொடர் கதையாக மாறிவிட்டது.
தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, மூன்று நாட்கள் தொடர்ந்து பராமரித்து, வெளியே விட வேண்டும் என்ற விதி உள்ளது. அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய தயாராக உள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின் நாய்களை தொடர்ந்து பராமரிக்கும் வசதிகள் இல்லை.
நாய் பிடிப்பு, ஏ.பி.சி., மையத்தில் சேர்க்கை, பிடிப்பட்ட இடங்களிலிருந்து இடமாற்றம் செய்ய ஒரு நாய்க்கு ரூ.200, மருந்துகள், உணவு உட்பட அறுவை சிகிச்சைக்கு முந்தைய பராமரிப்பு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்புக்கு ஒரு நாய்க்கு ரூ.1450 மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநில அரசு செயல்படுவதில் சிரமம் ஏற்பட்டதால் தொய்வு நிலை உண்டாகியது. இதை நிவர்த்தி செய்து தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய விலங்கு நல வாரியத்திற்கு தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சிகள் தோறும் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைப்பதற்காக திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
விலங்கு நல வாரியத்தின் அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான வசதிகள் இருப்பதை உறுதி செய்து அனுமதி அளித்தவுடன் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்படும். இதன் மூலம் நாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும், என்றார்.