/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் தினமும் பக்தர்களுக்கு அனுமதி
/
சதுரகிரியில் தினமும் பக்தர்களுக்கு அனுமதி
ADDED : ஏப் 03, 2025 03:03 AM
விருதுநகர்:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி பக்தர்கள் தினமும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களை பக்தர்கள் முழுமையாக பின்பற்ற வேண்டுமென விருதுநகர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தினமும் பக்தர்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி எப்போது முதல் அனுமதிக்கப்படுவார்கள் என பக்தர்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதல்படி பக்தர்கள் தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை சோதனை சாவடி வழியாக அனுமதிக்கப்படுவர். மாலை 4:00 மணிக்குள் திரும்பி வரவேண்டும். அனுமதியின்றி மலையில் தங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். பாலிதீன், பிளாஸ்டிக், தீப்பெட்டிகள் , எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

