/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆடி மாத பிரதோஷ வழிபாடு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
/
ஆடி மாத பிரதோஷ வழிபாடு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாத பிரதோஷ வழிபாடு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாத பிரதோஷ வழிபாடு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 23, 2025 02:44 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலையடிவாரத்தில் பக்தர்கள் குவிந்த நிலையில் காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு மலையேறினர். பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்த பின்னரே மலையேற அனுமதித்தனர்.வெயிலின் தாக்கம் குறைந்து லேசான சாரல் மழை பெய்த நிலையில் குளுமையான சூழலில் மலையேறினர்.
கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமாகலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், அடிவாரத்தில் தனியார் மடங்குகளிலும் அன்னதானம் வழங்கினர்.
ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் கோயிலுக்கு வரும் அனைத்து வழித்தடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவம், சுகாதாரம் உட்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் முகாமிட்டு பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
அடிவாரம் முதல் கோயில் வரை அபாயகரமான இடங்கள், நீர்வரத்து ஓடைகளில் தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்பு துறையினர், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் அறநிலைத்துறையினர் செய்திருந்தனர்.