ADDED : செப் 13, 2026 08:01 PM
தளவாய்புரம்: தளவாய்புரம் அடுத்த புனல் வேலியில் இலவச சேலை உற்பத்தி செய்யும் பெடல் தறி நெசவாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெடல் தறி நெசவாளர்கள் புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம், வேலை இழப்பு காலத்திற்கு நிவாரணம், உற்பத்தி செய்துள்ள சேலைகள் உடனடியாக கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்வது குறித்து கைத்தறித்துறை சார்பில் அதிகாரிகள் குழுவினர் நெசவாளர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதற்கு உடன்பாடு ஏற்படாத நிலையில் புனல் வேலியில் இரண்டு நாட்களாக கஞ்சி தொட்டி திறந்து நெசவாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந் நிலையில் நேற்று மாலை தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
