ADDED : மார் 28, 2026 04:11 AM
நாகர்கோவில்: ''நான் சாத்துார் தொகுதியில் போட்டியிடுகிறேன் ''என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
போர் சூழல் நேரத்திலும் கூட மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்துள்ளது. இதே போல் தமிழக அரசும் வரியை ரத்து செய்ய வேண்டும். பெண்களை இழிவாக பேசும் தி.மு.க.,வினர் மீது முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்ணாமலை தேர்தலில் நிற்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும்.
தே.ஜ., கூட்டணிக்கு வேறு ஏதும் கட்சிகள் வர வாய்ப்புள்ளதா என்பது பற்றி தற்போது கருத்து கூற முடியாது.
எங்கள் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். தேர்தல் கருத்துக்கணிப்புகளும் எங்களுக்கு சாதகமாக உள்ளது. தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு என்பது பரஸ்பரம் பேசி முடிவு செய்யப்பட்ட ஒன்று. சில இடங்களில் அவர்களுக்கு அதிகமாக கொடுத்துள்ளோம். சில இடங்களில் எங்களுக்கு அதிகமாக கிடைத்துள்ளது.
அ.தி.மு.க., தொகுதிகளை பா.ஜ., பெற்றுள்ளது என்பது அவதுாறு பிரசாரம். வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தொகுதிகளை கேட்டு வாங்கி விட்டோம் என கூறுவது சரி இல்லை. யார் வெற்றி பெற்றாலும் முதல்வர் பழனிசாமிதான்.
தற்போது இருக்கும் முதல்வர் மக்களை பற்றி கவலை கொள்ளாமல் ஐந்து ஆண்டுகளாக குடும்ப பிரச்னையை மட்டுமே பார்த்துக் கொண்டு வந்தார். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே இந்த தேர்தலின் அடிப்படை. நான் சாத்துார் தொகுதியில் போட்டியிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
