
சிவகாசி: புதர் மண்டிய நீர்வரத்து ஓடை, சேதமான மடை என விளாம்பட்டி கிடாக்குளம் கண்மாய் எண்ணற்ற பிரச்னைகளால் தள்ளாடுகின்றது.
சிவகாசி அருகே ஆனையூர் கிராமத்திற்குஉட்பட்ட விளாம்பட்டியில் கிடாக்குளம் கண்மாய் உள்ளது. 50 ஏக்கர் பரப்பளவு, 50 ஏக்கர் பாசனம்வசதி உடைய இந்த கண்மாயை நம்பி விளாம்பட்டி, ஏ.துலுக்கப்பட்டி பகுதி விவசாயிகள் நெல் பயிரிடுகின்றனர்.
இந்நிலையில் கண்மாய் கரை முழுவதுமே சீமைக் கருவேல மரங்கள் இடைவெளி இன்றி ஆக்கிரமித்துஉள்ளது. கரையும் மிகவும் பலவீனமடைந்து உள்ளது. இந்தக் கண்மாய்க்கு அருகில் உள்ள பெரிய பொட்டல்பட்டி கண்மாய் நிறைந்து ஓடை வழியாக தண்ணீர் வரும். ஆனால் ஓடை முழுவதும்புதர்கள் ஆக்கிரமித்து இருப்பதால் தண்ணீர் வர வழி இல்லை.
கண்மாயில் உள்ள மடையில் முழுவதும்மண் மேவி காணப்படுவதுடன் சேதமும் அடைந்துள்ளது. இதனால் மழை பெய்து கண்மாய்க்கு தண்ணீர் வந்தாலும் விவசாயம் நிலங்களுக்கு கொண்டு செல்ல வழி இல்லை.
இந்த ஆண்டு தண்ணீர்இல்லாமல் விவசாயம் பொய்த்து விட்டது. அனைத்து நிலங்களும் தரிசாக மாறிவிட்டது. கண்மாயினுள் குப்பை கொட்டப்படுவதால் தண்ணீர் வீணாகின்றது.
கார்த்தீஸ்வரன், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர்: கண்மாயினுள் கிணறு அமைக்கப்பட்டு இப்பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்றது. கண்மாய்க்கு தண்ணீர் வராததால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுவிட்டது. சேதம் அடைந்த மடையை சீரமைப்பதோடு மடையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாய்க்காலையும் சீரமைக்க வேண்டும்.
செந்தில் வேல், விவசாயி:கண்மாய் கரை முழுவதுமே சீமைக் கருவேல மரங்கள் இடைவெளியின்றி நிறைந்துள்ளது. மேலும் கரையும் பலவீனமடைந்து உள்ளது. எனவே கரையில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதோடு கரையும் பலப்படுத்த வேண்டும்.
லிங்கம், விவசாயம்: கண்மாய்க்கு தண்ணீர் வராததால் இந்த ஆண்டு விவசாயம் முழுமையாக பொய்த்துவிட்டது. கண்மாய்க்கு வருகின்ற ஓடையை துார்வார வேண்டும். அடுத்த ஆண்டிலாவது விவசாயத்திற்கு வழி செய்ய வேண்டும். கரையில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.