ADDED : மே 16, 2025 02:49 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் இருந்து கூமாபட்டி செல்லும் ரோட்டிலுள்ள விராக சமுத்திரம் கண்மாய்கரை ரோடு போதிய அகலமில்லாமல் இருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதனை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது கான்சாபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், பிளவக்கல் அணை பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் இந்த கண்மாய்க்கரை ரோடு வழியாக பயணித்து வருகிறது.
இந்நிலையில் விராக சமுத்திர கண்மாய் கரை ரோடு போதிய அகலம் இல்லாமல் குறுகியதாக இருப்பதால் எதிரும், புதிருமாக இரு வாகனங்கள் வரும்போது ஒன்றுக்கொன்று உரசி கொண்டு தான் ரோட்டை கடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிப்பவர்களும் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த மாதம் இந்த கண்மாய் கரையை ஒட்டிய வயல்வெளியில் ஒரு வேன் கவிழ்ந்து 3 பேர் காயமடைந்தனர். எனவே, விராகசமுத்திரம் கண்மாய் கரை ரோட்டை அகலப்படுத்தி, தடுப்பு சுவர்கள் கட்டி,2 வாகனங்கள் எளிதில் சிரமமுமின்றி சென்று வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.