/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
/
விருதுநகர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
ADDED : நவ 24, 2024 07:40 AM

விருதுநகர் : விருதுநகர் மெயின் பஜாரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசியல் கட்சியினரின் தலையீடால் அதிகாரிகள் தயங்கி வருகின்றனர்.
விருதுநகர், அதனை சுற்றிய புறநகர், ஊரகப்பகுதிகளில் வசிக்கும் குடியிருப்போர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்ல மெயின் பஜாருக்கு தினமும் வந்து செல்கின்றனர். இவர்கள் டூவீலர், ஆட்டோ, காரில் வந்து தேசபந்து மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
ஆனால் தற்போது மெயின் பஜாரில் கடைகளுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தி பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும் பஜாரில் கடை பொருட்களை ரோட்டில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இது போன்ற ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் பஜார் ரோடு குறுகலாகி வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அதற்கு அரசியல் தலையீடு முக்கிய காரணமாகவே இருந்து வருகிறது.
நகராட்சி, வருவாய்த்துறை, போலீசார் மக்களுக்காக இணைந்து பஜார் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாமல் இருப்பதால் மக்கள்பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு
காளிதாஸ், ம.நீ.ம., மத்திய மாவட்டச் செயலாளர், விருதுநகர்: விருதுநகர் மெயின் பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அதிகரித்து இருப்பதால் வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. இவற்றை அகற்ற நகராட்சி நிர்வாகம் வியாபாரிகளுடன் கலந்து பேசி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மக்கள், கடை உரிமையாளர்கள் சிரமமின்றி தேவையான பொருட்களை வாங்கி செல்ல முடியும்.
பஜாருக்குள் செல்ல முடியாமல் பரிதவிப்பு
வேல்முருகன், தனியார் ஊழியர்: வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க சென்றால் பஜாரில் நிறுத்தியுள்ள வாகனங்களை கடந்து செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. பொருட்களை வாங்கி விட்டு வெளியே வருவது போருக்கு சென்று வருவதை போல உள்ளது. எனவே விருதுநகர் மெயின் பஜாரில் அத்துமீறி வாகனங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஜாரில் இருப்பவர்களுக்கு மருத்துவ அவசரம் தேவைப்பட்டால் கூட ஆம்புலன்ஸ் கூட உள்ளே சென்று வர முடியாத நிலை உள்ளது. அரசியல் தலையீட்டால் இவ்வழியாக சென்ற பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரோட்டை ஆக்கிரமிப்பது உச்சம் பெற்றது. இன்று வரை மக்கள் அவதியில் உள்ளனர்.

