ADDED : அக் 15, 2024 04:46 AM
விருதுநகர்: விருதுநகரில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான அக். 24, 25 ஆகிய 2 நாட்களில் நடக்க உள்ள செயற்கை நுண்ணறிவு மாநாடு தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட நிர்வாகம், சிவகாசி மெப்கோ ஷ்லெங்க் பொறியியல் கல்லுாரி இணைந்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாடு தொழில்நுட்ப கருத்தரங்கம் இரு நாட்கள் நடக்கிறது. இதில் பள்ளி அளவில் அறிவியல், கலை பாடப்பிரிவுகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மட்டுமல்லாது கட்டடவியல், இயந்திரவியல், உயிரி தொழில்நுட்பம் போன்ற பிற பொறியியல் துறைகளிலும், கலை, அறிவியல் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பொருந்தக்கூடிய வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படை கோட்பாடுகள், அதனை பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள், அதன் சமூக தாக்கம் உள்ளிட்டவை குறித்து வல்லுனர்களின் விரிவுரைகள், செயல்முறை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு மாநாடு தொழில்நுட்ப கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் விருதுநகர் மாவட்ட மாணவர்கள் 96988 10699 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என்றார்.
