மக்கள் பிரச்னைகளை அதிகாரிகள் உடனுக்குடன் தீர்க்க வேண்டும்
மக்கள் பிரச்னைகளை அதிகாரிகள் உடனுக்குடன் தீர்க்க வேண்டும்
ADDED : ஜூன் 10, 2026 05:06 AM
அருப்புக்கோட்டை:'மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுடைய பிரச்சனைகளை அதிகாரிகள் உடனுக்குடன் தீர்க்க வேண்டும்,'' என ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தினார்.
அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பாலமுருகன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
மக்களுக்கான அரசு இது, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது நான் உட்பட அதிகாரிகளின் கடமை. அருப்புக்கோட்டை தொகுதியில் மக்கள் பலவித பிரச்சனைகளை எனக்கு மனுக்களாக கொடுத்துள்ளனர். பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் முக்கியமாக உள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுத்து மக்கள் சொல்லும் குறைகளை தீர்க்க வேண்டும்.
இதற்கு முன் அதிகாரிகள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் ஒரு வளையத்திற்குள் இருந்திருக்கலாம். இனிமேல் மக்களுக்கான இந்த ஆட்சியில் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படலாம்.
எந்தவித கட்டுப்பாடும் இல்லை. மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுடைய பிரச்சனைகளை அதிகாரிகள் உடனுக்குடன் தீர்க்க வேண்டும். உழைக்கும் அதிகாரிகளை முதல்வர் பார்த்துக் கொள்வார் .யாருடைய கட்டுப்பாடும் இன்றி நீங்கள் மக்கள் பணியாற்றலாம். அதிகாரிகளை யாரையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. இனிமேல் அதிகாரிகள் மக்களை அலைய விடாமல் அவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள், அரசியல் ஆதாயம் எதுவும் இல்லாமல் முதல்வரின் மனதில் உருவான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.,'' என்றார்.
முன்னதாக சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, அமைச்சர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். பின்பு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சத்துணவு திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
உடன் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
