ADDED : ஆக 26, 2026 03:38 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் பழைய நுாலக கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அந்த வழியாக செல்லும் மக்கள் பீதியுடன் செல்கின்றனர்.
எம்.ரெட்டியபட்டி தாலுகா அலுவலகம் அருகில் பொதுப்பணி துறையால் நுாலக கட்டடம் கட்டப்பட்டது. கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் கட்டடம் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்து உள்ளது. இதன் அருகிலேயே 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய நுாலக கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில் பழைய கட்டடம் நாளுக்கு நாள் சேதம் அடைந்து வருவதால் அதை இடித்து அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை மெத்தனம் காட்டுகிறது. சேதமடைந்த கட்டடம் வழியாக தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் வந்து செல்கின்றனர். கட்டடம் எந்த நேரமும் இடிந்து விட கூடிய நிலையில் இருப்பதால் பீதியுடன் செல்ல வேண்டி உள்ளது. பழையநுாலக கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
