ADDED : மார் 18, 2024 12:01 AM
விருதுநகர் : விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்கான சாட்டுதல் வைபவம் நேற்று நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.
விருதுநகர் ஹிந்து நாடார்கள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவின் சாட்டுதல் வைபவம் நேற்று நடந்தது. மார்ச் 31 கொடியேற்றமும், ஏப். 7 ல் பங்குனிப் பொங்கல், ஏப். 8 ல் கயிறுகுத்து, அக்னிச்சட்டி எடுத்தல், ஏப். 9 ல் தேரோட்டம், ஏப். 10 ல் தேர்தடம் பார்த்தல், ஏப். 11 ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டப்பட்டு கொடியிறக்கம் செய்யப்பட்ட பின் ஏப். 14 ல் திருவிழா நிறைவடைகிறது.
நேற்று நடந்த சாட்டுதல் வைபவத்தை முன்னிட்டு தெப்பம் சாட்டு பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. திருவிழாவிற்கு 21 நாள்கள் உள்ள நிலையில் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.
ஏற்பாடுகளை ஹிந்து நாடார் தேவஸ்தான நிர்வாகிகள் தங்கராஜன், சுந்தரவேல், கனகவேல், ஆனந்தவேல், பொன்னப்பன் செய்தனர்.

