/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டோரத்தில் முறிந்த நிலையில் மின்கம்பம்
/
ரோட்டோரத்தில் முறிந்த நிலையில் மின்கம்பம்
ADDED : அக் 16, 2024 04:05 AM

சிவகாசி : சிவகாசி விளாம்பட்டி ரோடு அருண் நகர் அருகே ரோட்டோரத்தில் முறிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை கயிறு கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணியில் நடந்து வருகிற நிலையில் விளாம்பட்டி ரோடு முக்கிய மாற்றுப்பாதையாக உள்ளது.
அனைத்து நகர் பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் டூவீலர்கள் இந்த ரோட்டில் தான் சென்று வருகின்றன. அனைத்து பள்ளி மாணவர்களும் இவ்வழியே தான் சென்று வருகின்றனர்.
இதனால் எப்போதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்நிலையில் இந்த ரோட்டில் அருண் நகர் அருகே ரோட்டோரத்தில் உள்ள மின்கம்பத்தின் உச்சிப் பகுதி முறிந்து விட்டது.
எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தில் தற்காலிகமாக கயிறு கட்டி நிறுத்தி வைத்துள்ளனர்.
பெரிய காற்று அடித்தாலோ மழை பெய்தாலோ கனரக வாகனங்கள் அருகில் செல்லும்போது அதிர்வு ஏற்பட்டாலே கீழே விழ வாய்ப்புள்ளது.
வாகனங்கள் செல்லும்போது முறிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.