தளவாய்புரம், : ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு மணி நேர மழை பெய்தது.
ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2:00 மணியளவில் ஒரு மணி நேர மழை பெய்தது. ராஜபாளையம், தளவாய்புரம், செட்டியார்பட்டி, சேத்துார் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் மதியம் வரை அதிகரித்த வெயில் தாக்கம் மாறி குளிர்ந்த சூழல் நிலவியது.
இந்நிலையில் செட்டியார்பட்டி புல மாடசாமி கோயில் தெருவை ஒட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் ஓடை அடைத்து விட்டது. ஏற்கனவே மலையடிவார குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் வடிகால் இப்பகுதியில் சேர்வதால் கழிவுநீர் ரோட்டில் ஆறு போல் ஓடியது.
இதே போல் முகவூர் கிராமத்திலும் அருகில் உள்ள மேடான பகுதிகள், நெசவாளர் குடியிருப்புகளில் வெளியேறிய கழிவுநீர் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பால் குடியிருப்பு அருகே தேங்கி நின்றது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.