/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆவின் வேலை பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்
/
ஆவின் வேலை பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்
ஆவின் வேலை பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்
ஆவின் வேலை பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்
ADDED : ஜூலை 16, 2025 11:35 PM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். வழக்கின் விசாரணை ஆக. 13க்கு ஒத்திவைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் தனது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி அ.தி.மு.க. நிர்வாகி விஜய் நல்லதம்பி ரூ.30 லட்சம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக 2021ல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் அளித்தார்.
இதனையடுத்து விஜயநல்ல தம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது நண்பர்கள் முத்துப்பாண்டி, மாரியப்பன், பாண்டியராஜன், ரவி கணேசன், ராமகிருஷ்ணன், நாகேசா ஆகியோர் மீதும், ராஜேந்திர பாலாஜி பணம் பெற்று தன்னை ஏமாற்றியதாக விஜய நல்லதம்பி கொடுத்த புகாரில் ராஜேந்திர பாலாஜி, அவரது நண்பர்கள் பாபுராஜ், பலராமன், பாண்டியராஜன் ,ரவி கணேசன் ,ராமகிருஷ்ணன், நாகேஷா ஆகிய 7 பேர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்தனர்.
இதில் 2022 ஜன.5ல் கர்நாடக மாநிலம் ஹாசனில் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
2023 ஜனவரியில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள்பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார், குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர். ஆனால், ராஜேந்திர பாலாஜி மீதான புகாரை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி வள்ளி மணவாளன் 2023 மார்ச் மாதம் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் ஏப். 15 ல் 600 பக்கங்கள் கொண்ட 2 கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றமான முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு இந்த வழக்கு நேற்று முதல் முறையாக விசாரணைக்கு வந்தது. ராஜேந்திர பாலாஜி உட்பட 8 பேர் ஆஜராயினர். வழக்கின் விசாரணையை ஆக.13 க்கு நீதிபதி ஜெயக்குமார் ஒத்தி வைத்தார்.