ADDED : செப் 04, 2026 04:51 PM
சிவகாசி, செப். 5 -
சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் உள்ள ரேஷன் கடை இடிந்து விழுந்த நிலையில் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே புதிய கட்டடம் கட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சித்துராஜபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே 2000 ல் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரேஷன் கடை கட்டப்பட்டது. கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இந்தக் கட்டடம் தற்போது சேதம் அடைந்துள்ளது. கூரை முன் பகுதி இடிந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது. இதன் அருகிலேதான் மக்கள் நின்று ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர் .மழைக்காலங்களில் தண்ணீர் கட்டடத்திற்குள் கசிவதால் உள்ளிருக்கும் அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்டடம் அவ்வப்போது இடிந்து விழுவதால் மக்கள் பொருட்கள் வாங்க வருவதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் கடை விற்பனையாளரும் அச்சத்திலேயே பணிபுரிகின்றார். எனவே ரேஷன் கடைக்கு என புதிய கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
