ADDED : பிப் 11, 2026 06:57 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ரோடு, வாறுகால், தாமிரபரணி குடிநீர், பூங்கா, சமுதாய கூடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் ஸ்ரீவில்லிபுத்துார் தைலாகுளம் மீனாட்சி நகர் குடியிருப்போர் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் இனாம் நாச்சியார் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட தைலாகுளம் மீனாட்சி நகர் குடியிருப்போர் கார்த்திகா, செல்வராணி, சக்திவேல், ரமேஷ், மாடசாமி, கருப்பாயம்மாள் கூறியதாவது;
எங்கள் குடியிருப்பு பகுதியில் மெயின் ரோடு போடப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது.
ஒரு சில தெருக்களில் பேவர் பிளாக் ரோடுகள் போடப்பட்ட நிலையில் பிற தெருக்களில் முறையான ரோடு வசதி இல்லை. இதனால் மழை நேரங்களில் சகதி ஏற்பட்டு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்லும் போது வழுக்கி விழும் நிலை ஏற்படுகிறது.
தற்போது குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வாறுகால் வசதி இல்லாததால் ரோட்டில் தான் கழிவுநீர் செல்கிறது. சில நேரங்களில் வீடுகளை சுற்றி தேங்குவதால் சுகாதாரக்கேடு, கொசு தொல்லை ஏற்படுகிறது.
தாமிரபரணி குடிநீர் வழங்கப்படாததால் போர்வெல் தண்ணீரையும், மினரல் வாட்டரையும் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையுள்ளது.
இதே போல் ஒரு சில மின்கம்பங்களில் தெரு விளக்குகள் இல்லாமல் இருண்டு காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் விஷ பூச்சி நடமாட்டம் ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இப்பகுதி மக்களின் பொது பயன்பாட்டிற்கான இடத்தை கண்டறிந்து பூங்கா, சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும்.
ஆண்டுக்காண்டு குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தனியாக ஒரு மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும். தற்போது தண்ணீர் பிடிக்க வேண்டும் மெயின் ரோட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது.
ஜல்ஜீவன் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பேவர்பிளாக் கற்களை மீண்டும் சரியாக பதித்து சீரமைக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, காலதாமதம் இல்லாமல் எங்கள் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

