/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, வாறுகால் சேதம், செயல்படாத சுகாதார வளாகம்
/
ரோடு, வாறுகால் சேதம், செயல்படாத சுகாதார வளாகம்
ADDED : ஜன 02, 2024 04:50 AM

சிவகாசி: ரோடு, வாறுகால் சேதம், செயல்படாத சுகாதார வளாகம், குடிநீர் பற்றாக்குறை என சிவகாசி தட்டாவூரணி பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
சிவகாசி தட்டாவூரணியில் ரோடு, வாறுகால் சேதம் முக்கிய பிரச்னையாக உள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள இரு சுகாதார வளாகங்களும் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாட்டில் இல்லை. இதனால் பெண்கள் திறந்த வெளியினை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இப்பகுதியில் சிறிய மழை பெய்தாலும் தெருக்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி விடுகின்றது.
மெயின் ரோடு சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தவிர மெயின் ரோட்டில் வாறுகால் துார்வாரப்படவில்லை. இதனால் தண்ணீர் வெளியேற வழி இன்றி ரோட்டிலேயே தேங்கி விடுகின்றது.
சரோஜா, குடும்பத் தலைவி: இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்படாத நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டது. புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டது. ஆனால் இதுவரையிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. கட்டப்பட்ட குடிநீர் தொட்டியும் பயன்பாட்டில் இல்லை. இதனால் 15 நாட்களுக்கு ஒரு முறை மாநகராட்சி வாகனம் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. குடிநீரும் போதுமான அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக உள்ளது. எனவே இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
முத்துக்குமார்: இங்கு அனைத்து தெருக்களிலுமே ரோடு, வாறுகால் சேதம் அடைந்துள்ளது. இதனால் நடந்து செல்வதே சிரமமாக உள்ளது. வாறுகால் துார்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. எனவே ரோடு, வாறுகாலை சீரமைக்க வேண்டும்.
முத்துராஜ்: இங்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் பயன்பாட்டிற்காக இரு சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது பூட்டப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் திறந்த வெளியை கழிப்பறையாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சசிகலா, கவுன்சிலர்: தட்டாவூரணி பகுதியில் வாறுகால், ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சியில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

