ADDED : மார் 19, 2026 04:44 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு சோதனைகளில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 520 பறிமுதல் செய்யப்பட்டது.
துாத்துக்குடி சாத்தான்குளம் மிட்டாய் வியாபாரி தங்கபாண்டி 22. மதுரையில் கடலை மிட்டாய் விற்பனை செய்த பணத்தை வசூல் செய்து நேற்று காலை திருநெல்வேலிக்கு லோடு வேனில் கொண்டு சென்றார். சூலக்கரை வழியாக சென்ற போது தனியார் மில் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கலைச்செல்வி தலைமையில் சோதனையிட்டதில் ஆவணங்கள் இன்றி ரூ.1.13 லட்சம் கொண்டு சென்றது கண்டறிந்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
*ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சரவணகுமார் நேற்று காலை 9:40 மணிக்கு மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் பின்புறம் வாகன சோதனை செய்தபோது முகவூர் தன்ராஜ் என்பவர் ஆவணங்கள் இல்லாமல் டூவீலரில் ரூ.50 ஆயிரத்து 630 கொண்டு சென்றதை பறிமுதல் செய்தார்.
* வத்திராயிருப்பு தாணிப்பாறை விலக்கில் நேற்று காலை 10:40 மணிக்கு நிலை கண்காணிப்பு குழு அலுவலர் நாகராஜன் வாகன சோதனை செய்தார். வயலில் நாற்று நடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு, மேற்குவங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த பாபா சிந்து பவுலியா 43, காரில், ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 91 ஆயிரத்து 890ஐ பறிமுதல் செய்தார்.
* அருப்புக்கோட்டை கல்லூரி அருகில் வாகன சோதனை செய்த போது அந்த வழியாக வந்த ஜவுளிக்கடை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி 2 .27 லட்சம் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் வேலிடம் ஒப்படைத்தனர்.
மொத்தம் நேற்று இரவு 7:00 மணி வரை நடந்த சோதனைகளில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 520 வரை பறிமுதல் செய்யப்பட்டது.
