/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கழிவுநீர் தேக்கம், துார்வாராத வரத்து ஓடை, சேதமான மடை
/
கழிவுநீர் தேக்கம், துார்வாராத வரத்து ஓடை, சேதமான மடை
கழிவுநீர் தேக்கம், துார்வாராத வரத்து ஓடை, சேதமான மடை
கழிவுநீர் தேக்கம், துார்வாராத வரத்து ஓடை, சேதமான மடை
ADDED : அக் 02, 2025 04:24 AM

சிவகாசி: கண்மாய் முழுவதும் கழிவுநீர் தேக்கம், துார்வாராத வரத்துக்கால்வாயில் முட்புதர்கள் ஆக்கிரமிப்பு கலுங்கு, மடை சேதம் என திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாய் பரிதாபத்தில் உள்ளது.
உறிஞ்சிகுளம் கண்மாய் 80 ஏக்கர் பரப்பளவு, 100 ஏக்கர் பாசன வசதி கொண்டது. இதனை நம்பி விவசாயிகள் இப்பகுதியில் நெல், வாழை பயிரிடுகின்றனர். திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் நிறைந்து உறிஞ்சிகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வருகின்றது. இங்கிருந்து செங்கமலப்பட்டி புது கண்மாய், செல்லை நாயக்கன்பட்டி, ரங்கசமுத்திரம், வாடியூர் கண்மாய்ர்களுக்கு தண்ணீர் செல்கிறது. பெரியகுளம் கண்மாயிலிருந்து உறிஞ்சிகுளம் வருகின்ற வரத்து கால்வாய் துார்வாரப்படவில்லை இதனால் தண்ணீர் வருவது தடை படுகிறது. மேலும் பாப்பாங்குளம் கண்மாய் கழிவுநீர் உறிஞ்சி குளத்திற்கு வருகின்றது. வரத்து கால்வாய் வழியாக கழிவு நீர் மட்டுமே வருவதால் உறிஞ்சிகுளம் கண்மாய் முழுவதுமே கழிவு நீர் தேக்கமாக மாறிவிட்டது. இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வந்தும் பலன் இல்லை. கடந்த காலங்களில் கண்மாய்க்கு தண்ணீர் வந்தும் கண்மாயின் கழுங்கு மற்றும் மடைகள் சேதம் அடைந்து தண்ணீர் வெளியேறிவிட்டது. முழுவதுமே கழிவுநீர் நிரம்பி இருப்பதால் இதனை நம்பி நெல், வாழை பயிரிட்டு விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த தண்ணீரை பயிர்களுக்கு பாய்ச்சினால் நோய் தாக்குதலுக்கு ஆளாகி விட்டது. கண்மாய்க்கு தண்ணீர் வந்ததால் நிலத்தில் நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகளால் போடப்பட்ட போர்வெல்லில் இருந்து சுத்தம் இல்லாத தண்ணீர் மட்டுமே கிடைக்கின்றது. இதனை பயன்படுத்தும் மக்களும் பல்வேறு நோய்க்கு ஆளாகின்றனர். கண்மாயில் பெரும்பான்மையான பகுதிகளில் கரைகள் பலவீனம் அடைந்துள்ளது. தவிர ஆங்காங்கே சீமை கருவேல மரங்களும் ஆக்கிரமித்துள்ளது. எனவே முழுமையாக கண்மாயினை துார்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
துார் வார வேண்டும் அழகர்சாமி, திருத்தங்கல் விவசாயிகள் சங்க தலைவர், இரு போகம் விவசாயத்திற்கு பயன்படுகின்ற தண்ணீர் கழிவுநீராக மாறியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அரசு மருத்துவமனையின் முன்பு வருகின்ற வரத்து கால்வாயினை முழுமையாக துார்வார வேண்டும் இதற்கு அருகில் உள்ள கழுங்கும் சேதம் அடைந்திருப்பதால் தண்ணீர் வெளியேறுகிறது. எனவே அதனையும் சீரமைக்க வேண்டும்.
விவசாயம் கேள்விக்குறி ஐகோர்ட் மகாராஜா, கண்மாயை முழுமையாக துார்வாரி கழிவு நீர், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இந்த கண்மாயை நம்பி மற்ற கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்லும் நிலையில் அங்கும் கழிவுநீரே செல்கிறது. இதனால் அங்கும் நீர்நிலை பாதிக்கப்பட்டு விவசாயம் கேள்விக்குறி ஆகிறது.
துர்நாற்றம் பொன்னுசெல்வம் தனியார் ஊழியர், விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் ஆதாரமாகவும் பயன்படுகின்ற கண்மாய் பலனில்லாமல் போய்விட்டது. ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு இந்த கண்மாய் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டது. ஆனால் தற்போது குடிநீர் ஆதாரமே தேவையில்லை என மக்கள் நினைக்கும் அளவிற்கு கண்மாய் மாறிவிட்டது. கண்மாய் முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுகிறது. இதில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். மழைக்காலம் துவங்குவதற்கும் பணிகளை மேற்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.
நிதி இல்லை ஜெயந்தி,வட்டார வளர்ச்சி அலுவலர், தற்போது நிதி இல்லாததால் துார்வாரும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. நிதி வந்தவுடன் கண்மாய் முழுமையாக துார்வாரப்படும்.