/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
15 ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகங்கள், நவீன இறைச்சி கூடம்
/
15 ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகங்கள், நவீன இறைச்சி கூடம்
15 ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகங்கள், நவீன இறைச்சி கூடம்
15 ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகங்கள், நவீன இறைச்சி கூடம்
ADDED : செப் 07, 2025 02:46 AM

சிவகாசி: சிவகாசியில் மாநகராட்சி சார்பில் விஸ்வநத்தம் ரோட்டில் வணிக வளாகம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாகியும் பயன்பாட்டில் இல்லாததாலும், பெயரளவிற்கு மட்டுமே செயல்படும் நவீன இறைச்சி கூடத்தாலும் அரசு நிதி வீணாகிறது.
எனவே நவீன இறைச்சி கூடத்தையும் வணிக வளாக கட்டடங்களையும் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி நகரில் ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை குடியிருப்பு பகுதி, மக்கள் நடமாடும் பகுதி, திறந்த வெளியில் கொட்டி இறைச்சி வியாபாரிகள் நகரை மாசுபடுத்தி வந்தனர்.
எனவே நகரை துாய்மைப்படுத்தும் நோக்கில் விஸ்வநத்தம் செல்லும் ரோட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. ஒரு கோடியில் நவீன இறைச்சி கூடமும், இறைச்சியை விற்பனை செய்ய வணிக வளாகத்தில் 126 கடைகளும் கட்டப்பட்டது.
மக்களும் இறைச்சிக்காக வேறு எங்கும் அலையாமல் ஒரே இடத்தில் வாங்கி பயன்பெறலாம். ஆனால் கட்டப்பட்ட சில நாட்கள் மட்டும் கண் துடைப்பாக இவைகள் செயல்பட்டு வந்தன.
அதன் பின்னர் செயல்படவில்லை. செயல்படாத வணிக வளாகங்களுக்கு செல்ல ரோடு அமைப்பதற்காக பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 50 லட்சம் செலவழிக்கப்பட்டது. அந்தப் பணமும் வீணாகிவிட்டது.
தற்போது ஒரு சில கடைகள் செயல்படுகின்றன. ஆனால் அவைகள் இறைச்சி கடைகள் இல்லை. வேறு ஏதோ பயன்பாட்டிற்கு உள்ளது.
கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்றும் அவைகள் காட்சி பொருளாகவே உள்ளன. மேலும் இப்பகுதி பாராகவும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவிட்டது.
இறைச்சிவதைக்கூடமும் வணிக வளாகக் கட்டடங்களும் உரிய பராமரிப்பு இல்லாததால் சேதம் அடைந்து விட்டது. பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் இருப்பிடமாக மாறிவிட்டது.
தற்போது இறைச்சிவதைக்கூடம் மட்டும் பெயரளவிற்கு செயல்படுகின்றது. இங்கு வெட்டப்படுகின்ற இறைச்சிகள் மீண்டும் நகருக்கு உள்ளே தான் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது.
வழக்கம்போல நகர் மீண்டும் இறைச்சி கழிவுகளால் அசுத்தமாக்க படுகின்றது. அதே சமயத்தில் தற்போது மீண்டும் புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது. ஆனால் வணிக வளாகங்களை கண்டுகொள்ளவில்லை.
எனவே ஓரளவிற்கு நன்றாக உள்ள கட்டடங்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.