/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர்களுக்கு விடுதிகள் இல்லாததால் அவதி
/
மாணவர்களுக்கு விடுதிகள் இல்லாததால் அவதி
ADDED : ஜூன் 06, 2025 02:26 AM

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், திருச்சுழி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆகிய 5 இடங்களில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளும், 12 தனியார் கலை கல்லுாரிகளும் செயல்பட்டு வருகிறது.
சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் 12 இளங்கலை பாடப்பிரிவுகளில் 620 இடங்களும், ஸ்ரீவில்லிபுத்துார் கல்லுாரியில் 5 பாடப்பிரிவுகளில் 280 இடங்களும், சாத்துார் கல்லுாரியில் 4 பாடப்பிரிவுகளில் 240 இடங்களும், திருச்சுழி கல்லுாரியில் 5 பாடப்பிரிவுகளில் 230 இடங்களும் அருப்புக்கோட்டை கல்லுாரியில் நான்கு பாடப்பிரிவுகளில் 240 இடங்கள் என மொத்தம் 1610 இடங்கள் உள்ளன. கலந்தாய்வு முடிந்த பின்னர் இதில் 15 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 4 மாணவர்கள், 4 மாணவியர் விடுதிகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை சார்பில் 2 மாணவர்கள், 3 மாணவியர் விடுதிகள் என மொத்தம் 13 கல்லுாரி விடுதிகள் உள்ளன.
இதில் அரசு கல்லுாரி உள்ள ஸ்ரீவில்லிபுத்துார், திருச்சுழியில் மாணவ மாணவியர் விடுதி இல்லை. மேலும் சிவகாசியில் மாணவர் விடுதி இல்லாததால் சாத்துார் சின்னக்காம்பட்டி மாணவர் விடுதியில் தங்கி மாணவர்கள் படிக்கும் சூழல் உள்ளது.
சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை, முதுகலை படிப்பில் 12 பாடப்பிரிவுகள் உள்ளதாலும், விரும்பிய பாடப்பிரிவுகள் கிடைப்பதாலும் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, தேனி, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். 60 சதவீதத்திற்கும் மேல் மாணவிகள் உள்ளனர்.
ஆனால் சிவகாசியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தற்காலிக கட்டடத்தில் மாணவியர் விடுதி இயங்கும் நிலையில், தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவர் விடுதி கல்லுாரி மாணவியர் விடுதியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கல்லுாரி விடுதிகள் புதிதாக கட்டப்படாமல் ஏற்கனவே பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த பள்ளி விடுதியே கல்லுாரி விடுதியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் போதிய இடவசதி இன்றி மாணவ மாணவிகள் நெருக்கடியில் தங்கும் சூழல் நிலவுகிறது.
மேலும் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கல்லுாரி அருகே விடுதிகள் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதனால் கல்லுாரி விடுதிகளுக்கு கல்லுாரி அமைந்துள்ள பகுதியிலேயே சொந்த கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி, ஜூன் 6-
விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு சொந்தமான கல்லுாரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.