ADDED : பிப் 15, 2026 05:21 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையத்தில் கிராமத்து புற மாணவர்கள் அதிக அளவில் வந்து படித்து வெற்றி பெற்று அசத்திய வருகின்ற நிலையில், கூடுதல் வசதிகள் தேவையாக உள்ளது என மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நெசவாளர் காலனியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவு சார் நூலகம் கட்டப்பட்டது. இதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன வசதிகள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இணையதள வைபை வசதி, அமைதியான வாசிப்பு அரங்கம்,ஆன்லைன் கல்வி சேவைகள், கல்வி தகவல்கள் உயர்கல்வி வாய்ப்புகள் ஆராய்ச்சி வசதிகள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் பலர் படிக்கும் வசதியுடன் உள்ளது.
அருப்புக்கோட்டை நகர் பகுதி மாணவர்கள் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவ மாணவர்களுக்கு இந்த அறிவு சார்ந்த மையம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி., மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகளில் இங்கு வந்து படித்து மாணவர்கள் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர்.
மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் கம்ப்யூட்டர் வசதிகள், புத்தக வசதிகள் வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 4 நாட்களுக்கு முன்பு இந்த மையத்தை ஆய்வு செய்து தேவையான வசதிகள் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து நகராட்சி தலைவர் சுந்தர லட்சுமி: அறிவு சார் மையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. கூடுதல் கம்ப்யூட்டர் வசதிகள், கம்ப்யூட்டர் டெக்னீசியன்கள், பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்.
