பாதியில் ரோடு பணி, சேதமடைந்த வாறுகால்: சிரமத்தில் முனீஸ்வரன் காலனி கே.கே. நகர் மக்கள்
பாதியில் ரோடு பணி, சேதமடைந்த வாறுகால்: சிரமத்தில் முனீஸ்வரன் காலனி கே.கே. நகர் மக்கள்
UPDATED : ஜூன் 20, 2026 04:51 PM
ADDED : ஜூன் 20, 2026 04:50 PM

சிவகாசி:பாதியில் நிற்கும் ரோடு பணி, சேதமடைந்த வாறுகால், தண்ணீர் இல்லாததது உட்பட எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி திருத்தங்கல் முனீஸ்வரன் காலனி, கே.கே. நகர் பகுதி மக்கள் தவிக்கின்றனர்.
திருத்தங்கல் முனீஸ்வரன் காலனி கே.கே. நகரில் வாறுகால் துார்வாராததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பாண்டியன் நகரில் இருந்து கே.கே. நகர் வழியாக சத்யா நகர் செல்லும் ரோடு சீரமைப்பதற்காக 5 மாதங்களுக்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது. ஆனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் எந்த வாகனமும் சென்றுவர முடியவில்லை. இதே மெயின் ரோட்டில் வாறுகால் சேதமடைந்துள்ளதோடு துார்வாரப்படவும் இல்லை. இப்பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே சமூகவிரோதிகள் மது அருந்துவதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். பள்ளி அருகே உள்ள கிணற்றினை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
வாகனங்கள் செல்வதில் சிரமம்
ராஜா, டிரைவர், பாண்டியன் நகரில் இருந்து சத்யா நகர் வழியாக சிவகாசிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். இந்த ரோடு சேதம் அடைந்த நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு சீரமைப்பதற்காக தோண்டப்பட்டது. ஆனால் அடுத்த கட்டப் பணிகள் நடைபெறவில்லை. தற்போது கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. உடனடியாக ரோட்டை சீரமைக்க வேண்டும்.
கழிவுநீர் தேக்கம்
பிளாவடியான், பெயிண்டர், இப்பகுதியில் குப்பை சேகரிக்க பணியாளர்கள் வராததால் ஆங்காங்கே குப்பைகள் ரோட்டிலேயே கொட்டப்பட்டுள்ளது. வாறுகாலும் துார்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. கொசு உற்பத்தியாகி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
தண்ணீருக்கு தவிப்பு
தங்க முனீஸ்வரி, குடும்பத் தலைவி, இப்பகுதியில் புழக்கத்திற்கு என தண்ணீர் வினியோகம் இல்லை. இதனால் குளிக்க, துணி துவைக்க என அனைத்து தேவைகளுக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கித் தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. தினமும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு வசதி இல்லை. எனவே தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய்கள் தொல்லை
தங்கலதா, குடும்பத் தலைவி, கே.கே. நகரில் புழக்கத்திற்கு என தொட்டி அமைக்கப்பட்டும் இதுவரையில் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். இப்பகுதியில் அதிகமான தெருநாய்கள் நடமாடி மக்களை அச்சுறுத்துகிறது. அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
