/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நலிவடையும் கரி மூட்டம் தொழில்
/
நலிவடையும் கரி மூட்டம் தொழில்
ADDED : பிப் 24, 2026 05:47 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதிகள் கரிமூட்டம் போடும் தொழில் பல்வேறு பிரச்னை களால் நலிவடைந்து வருகிறது.
அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் கரிமூட்டம் போடும் தொழில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. விவசாயம் சரிவர இல்லாததால், இந்த பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் பலர் பாரம்பரியமாக கரிமூட்டம் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் கிடைக்கும் கரி சிறிய ஓட்டல்கள், டீக்கடைகள், சலவை நிலையம், பாத்திரம் ஈயம் பூசும் தொழில், வாகன பேட்டரிகள் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது.
சீமை கருவேல மரங்களை நன்றாக வெட்டி அடுக்கி வைகோலை பரப்பி, அதன் மேல் சேற்றை பூசி அடிப்பாகத்தில் துளையிட்டு தீயை வைப்பர். இதில் வெளியாகும் புகையில் கட்டைகள் கரிகளாக மாறும்.
இது குறித்து கரிமூட்டம் போடுபவர்கள்: மூட்டம் போடும்போது 10 நாட்கள் இரவு பகலாக விழித்து பாதுகாக்க வேண்டும். அடிக்கடி தண்ணீர் தெளித்து கரிகளை எடுப்போம். தொடர்ந்து எரிந்தால் கட்டைகள் சாம்பலாக ஆகி விடும். 10 டன் விறகு எடுத்தால் 4 டன் கரி கிடைக்கும். கஷ்டமான தொழில். கூலி உயர்வு மரங்கள் கிடைப்பது குறைந்து வருவதால் சிரமப்பட்டு தொழில் செய்து வருகிறோம். அரசு எங்கள் தொழிலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

